- ஜோ பைடன் ஜனாதிபதியாக தெரிவானதாக அறிவிப்பு
- அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்
- நாலவர் மரணம்; உலக நாடுகள் கண்டனம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பே வன்முறையை தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்தது அவமானம் என உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்காவில் அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் நிகழ்வை தடுக்கும் வகையில், டொனால்ட் ட்ரம்ப் தமது ஆதரவாளர்களுக்கு நேற்று அறை கூவல் விடுத்திருந்தார்.
இந்த நிலையில் கெபிட்டல் கட்டடத்தில் எல்க்டோரல் வாக்குகளை பரிசீலனை செய்து ஜோ பைடன் வெற்றியாளர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் பணிகள் தொடங்கின.
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை உறுதி செய்வதற்காக நாடாளுமன்றக் கூட்டம் நடந்துகொண்டிருந்தது.
இந்த பணிகளை தடுத்து நிறுத்த ட்ரம்ப் ஆதரவாளர்கள் கெபிட்டல் கட்டடத்திற்குள் நுழைந்தனர். அப்போது கட்டடத்தின் ஜன்னல்களை உடைப்பது, அங்கிருந்த பொருட்களை சூறையாடுவது என கலவரமாக மாறிய குறித்த போராட்டத்தில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
அத்துமீறி உள்ளே நுழைந்த ட்ரம்ப் ஆதரவாளர்கள் போலீஸாரால் கட்டுப்படுத்த முடியாத நிலையின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு பெண் ஒருவர் பலியானார்.
சில கலவரக்காரரர்கள் பக்கச் சுவற்றைப் பிடித்து ஏறிச் சென்று நாடாளுமன்ற செனட் அவைக்குள் நுழைந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்கல் தாக்குதலில் இருந்து தப்பிக்க ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதற்கு முன்னர் 200 ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்ற கட்டடத்திற்குள் இது போன்ற வன்முறை நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் தற்போது இடம்பெறும் வன்முறை தொடர்பில் உலகத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.
நார்வோஜியன் பிரதமர் எர்னா சோல்பெர்க் கூறுகையில், வாஷிங்டனில் நாம் பார்ப்பது முற்றிலும் ஏற்க முடியாதது. இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும் எனத் தெரிவித்துள்ளார்.
கேப்பிடல் கட்டடம் மீண்டும் பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டுக்குள் வந்து, நிறுத்தப்பட்ட நாடாளுமன்றக் கூட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது.
இச்சம்பவத்தில் இதுவரை பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஆர்பாட்டக்காரர்களிடமிருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இக்கலவரம் குறித்து தெரிவித்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன், தனது கண்டனைத்தை வெளியிட்டதோடு, டொனால்ட் ட்ரம்ப் தனது தோல்வியை ஏற்க மறுத்த வன்முறை வெளிப்பாடே இதுவென்றும், ட்ரம்ப் தனது கும்பலை போராட்டத்துக்கு தூண்டிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனநாயகம் கடுமையான தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், நாட்டின் வரலாற்றில் இது ஒரு இருண்ட தருணம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தனது ஆதரவாளர்களை வீட்டுக்குத் திரும்புமாறு தெரிவித்து ட்ரம்ப் வெளியிட்டுள்ள வீடியோவை, தேர்தல் விதிமுறை மீறல் மற்றம் வன்முறையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என ட்விற்றர் தளம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவாகியுள்ளதாக உத்தியோகபூர்வமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த சம்பவங்கள் தொடர்பில் பிரதி பாதுகாப்பு ஆலோசகர் மெட் பொட்டிங்கர் உள்ளிட்ட வெள்ளை மாளிகை நிர்வாக அதிகாரிகள் நால்வர் தங்களது இராஜினாமாவை அறிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பிபிசி நிறுவனம் வெளியிட்டுள்ள புகைப்படத் தொகுப்பு...
from tkn