இன ஒற்றுமைக்கான இடமாக பாராளுமன்றத்தை பயன்படுத்துவோம்

- நீதியமைச்சர் அலிசப்ரி அழைப்பு

ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டு தொடர்ந்து பிரிந்திருப்பதா? ஒன்றிணைந்து முன்னேறிச் செல்வதா? என்று நாம் சிந்திக்க வேண்டும். இனங்களுக்கிடையில் ஒற்றுமை வளர்ப்பதற்கான இடமாக இந்த பாராளுமன்றத்தை பயன்படுத்திக் கொள்ளவேண்டுமென நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

ஒரு சில சட்டத் திருத்தங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய அவர்  மேலும் கூறியதாவது,

நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்து 73 வருடங்கள் ஆகின்றன. இந்தப் பகுதியில் நாம் இலங்கையர் என்ற வகையில் மாற்றங்கள் இருந்து ஒற்றுமையைக் காண தவறிவிட்டோம். உலகில் பல நாடுகள் இன, மத, பிரதேச அடிப்படையில் பிரிந்து இருந்தன. பின்னர் அவற்றிலிருந்து பாடம் கற்றன.

73 ஆண்டுகள் கடந்தும் எமது நாட்டில் இனங்களுக்கிடையிலான வேறுபாடு குறைந்ததாக தெரியவில்லை. வேறுபட்ட இனத்தை, மதத்தை சேர்ந்தவராக இருப்பதாலோ வேறுபட்ட மொழியைப் பேசுவதால் எதிரிகள் ஆகிவிடுவதில்லை. வேற்றுமையில் ஒற்றுமையை காண்பதையே அரசியலமைப்பும் நமது தேசிய கீதமும் வலியுறுத்துகிறது. இதன் அடிப்படையிலேயே பேச்சு சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது. இறந்த காலத்தை திரும்பிப் பார்த்தால் அனைவரும் தவறு செய்த இடங்கள் பல இருக்கவே செய்கின்றன.

1958,1978 கலவரங்கள், யாழ். நூலக எரிப்பு, 1983 இனக் கலவரம், காத்தான்குடி தாக்குதல், அண்மையில் இடம்பெற்ற சஹ்ரானின் தாக்குதல் எல்லாம் கரும் புள்ளியாக அமைந்தன. சமூகத்தை ஓரம்கட்டி இதற்கு தீர்வு காண்பது என்பது தவறான வழியைத் தான் காட்டும்.

ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டு தொடர்ந்து பிரிந்திருப்பதா? ஒன்றிணைந்து முன்னேறி செல்வதா? என்று நாம் சிந்திக்க வேண்டும். இனங்களுக்கிடையில் ஒற்றுமை வளர்ப்பதற்கான தளமாக இந்த பாராளுமன்றத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்தும் இடமாக இந்தப் பாராளுமன்றம் பயன்படுத்தப்பட்டால் எதிர்காலம் சுமுகமாக அமையாது. சில ஊடகங்கள் இனங்களுக்கிடையே விரிசலை ஏற்படுத்த முயல்கின்றன. இரண்டாவது உலக யுத்தத்தில் ஹிட்லர் நடந்து கொண்ட விதமும் இன்று சில ஊடகங்கள் நடந்து கொள்ளும் விதமும் வேறுபட்டவை அல்ல .

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புள்ள அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும். அதேபோன்று இந்தத் தாக்குதல் உடன் தொடர்பு இல்லாத எவருக்கும் தண்டனை வழங்கப்படக் கூடாது.

முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தை திருத்துவதற்கும் திருமண வயதை 18 ஆக மட்டுப்படுத்தவும் தேவையான திருத்தங்கள் செய்யப்படும் . புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதற்காக சிறந்த நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

எல்லா சமூகத்தவர்களும் தவறு செய்துள்ளனர். கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்று ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.

தென்னாபிரிக்காவில் இருந்து நாம் பாடம் கற்க வேண்டும்.

ஷம்ஸ் பாஹிம், நிஷாந்தன் சுப்ரமணியம்

Thu, 01/07/2021 - 09:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை