காணி சுவீகரிக்க முயன்றதால் மக்கள் எதிர்ப்பு போராட்டம்

- பொலிசார் குவிப்பு; பதற்றமான சூழல்

யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில்  பொதுமக்களின் காணிகளை சுவிகரிப்பதற்கு எதிராக பாரிய போராட்டமொன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அப் பகுதியில் பெருமளவில் பொலிசார் குவிக்கப்பட்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

மண்டைதீவு ஜே107கிராமசேவகர் பிரிவிற்கு உட்பட்ட 29பேரின் 18ஏக்கர் பரப்பு காணி சுவிகரிப்பதற்காக நில அளவைத் திணைக்களத்தினரால் காணி அளவீடு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து காணி அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து  காணி உரிமையாளர்களும் பொது மக்களும் அரசியல்வாதிகளும் அங்கு திரண்டிருந்தனர். இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு போது நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் காணிகளை அளவீடு செய்வதற்கு வருகை தந்திருந்தனர்.

இதன்போது காணிகளை அளவீடு செய்ய கடும் எதிர்ப்பு வெளிப்படுத்திய நிலையில் காணிகளை அளவீடு செய்யாமலே நில அளவைத் திணைக்களத்தினர் திரும்பிச் சென்றிருந்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் செல்ல தயாரான நிலையில் பொலிஸ் பாதுகாப்புடன் நில அளவை திணைக்கள அதிகாரிகள் மீண்டும் அங்கு வந்து காணிகளை அளவீடு செய்யப் போவதாக அறிவித்தனர்.

எனினும் காணிகளை அளவீடு செய்ய அனுமதிக்க முடியாதென்று எதிர்ப்பு தெரிவித்து பொது மக்களும் அரசியல் பிரமுகர்களும் காணிகளின் உரிமையாளர்களும் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில்  பதற்ற மான சூழல் ஏற்பட்டது. இதன் பின்னர் அங்கு வருகை தந்த வேலணை பிரதேச செயலர் சோதிநாதன்  இங்குள்ளவர்களின் எதிர்ப்பு காரணமாக காணி அளவிடுவதை நிறுத்துவதாகவும் காணி அமைச்சுடன் இது குறித்து பேசி அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் அதுவரையில் காணி அளவீடு மேற்கொள்ளபடாதென்றும் தெரிவித்தார். இதனையடுத்து நில அளவை திணைக்களத்தினரும் பொலிசாரும் திரும்பிச் சென்றதுடன் அங்கு நின்றிருந்த மக்களும் அரசியல் வாதிகளும் சென்றிருந்தமை குறிப்பிடதக்கது.

பருத்தித்துறை விசேட நிருபர்

Tue, 01/19/2021 - 13:01


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை