- சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி
அனைத்து துறையினரும் இணைந்து செயற்படும்போது அது பெரும் பலமாகுமென சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய கொரோனா வைரஸ் சூழ்நிலையிலும் அனைவரும் இணைந்து பெரும் பலத்துடன் செயற்பட வேண்டியது அவசியமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க அரசியல் தலைமைத்துவத்துடன் பொதுமக்கள், சுகாதாரத்துறையினர்,நிறுவனங்கள்,மற்றும் மதத் தலைவர்கள் இணைந்து செயற்படுவது பெரும் பலமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குருணாகல் மாவட்ட வைத்தியசாலையில் பிசிஆர் பரிசோதனை ஆய்வுகூடம் ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்.
அனைவரும் இணைந்து செயற்படுவது என்பது மாபெரும் பலமாகும். அது பெரும் சக்தியாக உருவெடுக்கும். அந்த வகையில் அரசியல்துறை, சுகாதாரத்துறை, மதத்தலைவர்கள் அனைவரும் இணைந்து செயல்படுவது மாபெரும் பலமாகும்.
வெள்ளையர்கள் எமது நாட்டை ஆக்கிரமிப்பதற்கு முன்பதாக அவ்வாறானதொரு நிர்வாகவியூகமே நாட்டில் காணப்பட்டது. அந்த கிராமிய ரீதியான நிர்வாக வியூகத்திற்கு பௌத்த மதத் தலைவர்களே தலைமைத்துவம் வழங்கினர்.
கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகளிலும் அவ்வாறான ஒரு இணைந்த செயற்பாடு அவசியமாகிறது.
அதற்கு அரசியல் தலைமைத்துவம், சுகாதாரத்துறை மற்றும் மதத்தலைவர்கள் இணைந்து செயலாற்ற வேண்டும்.
சுகாதாரத் துறையினருக்கு சிகிச்சை அளிப்பது மற்றும் தனிமைப் படுத்துவது போன்ற பல்வேறு வேலைகள் உள்ளன.
அதனால் தற்போது கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள், மதத்தலைவர்கள், சுகாதாரத்துறையினர், அரச நிறுவனங்கள், கிராமிய குழுக்கள், மாவட்ட குழுக்கள் என இணைந்த செயற்பாட்டுக்கு நாம் செல்ல வேண்டியுள்ளது. கொரோனா வைரஸ் ஒழிப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம். தற்போது நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டு வருகின்றோம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.(ஸ)
லோரன்ஸ் செல்வநாயகம்
from tkn