மேல்மாகாண பாடசாலைகளை திறக்கும் முடிவு இரு வாரங்களில்

கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிப்பு

மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை எதிர்வரும் இரண்டுவாரக் காலப்பகுதிக்குள் உரிய சுகாதார வழிகாட்டல்களுட ன் ஆரம்பிப்பதற்கான விசேட பேச்சுவார்த்தை நாளை புதன்கிழமை இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த 11ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டது முதல் பாடசாலைகளில் மாணவர்களின் வருகை 59 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. ஆசிரியர்களின் வருகை 88 சதவீதத்திற்கும் அதிகமாகும். இதுதான் ஆரம்பம். படிப்படியாக பெற்றோரினதும் மாணவர்களினதும் நம்பிக்கை அதிகரிக்க அதிகரிக்க பாடசாலைக்கான வருகை சதவீதமும் அதிகரிக்கும்.

உரிய பாதுகாப்பு வேலைத்திட்டங்களுடன் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதில் பெற்றோர் கொண்டிருந்த நம்பிக்கையும் அர்ப்பணிப்பும் இந்த மாணவர்களின் வருகை சதவீதத்தில் தெளிவாக தெரிகிறது.

விமர்சனங்களுக்கு அஞ்சி, அச்சத்துடன், தொடர்ச்சியாக பாடசாலைகளை மூடி வைத்திருக்க முடியுமா? உரிய சுகாதார நடைமுறைகளுடன் முழுமையான வேலைத்திட்டமொன்றை செயல்படுத்தியுள்ளோம். கடந்த நவம்பர் மாதம் 23ஆம் திகதி தனிமைப்படுத்திருந்த பகுதிகளை தவிர்ந்த ஏனைய பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் 6ஆம் வகுப்புமுதல் 11ஆம் வகுப்புவரை ஆரம்பித்திருந்தோம். கடந்த 11ஆம் திகதிமுதல் மேல்மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பகுதிகளை தவிர்ந்து நாட்டில் உள்ள ஏனைய அனைத்துப் பாடசாலைகளையும் ஆரம்பித்திருந்தோம்.

எதிர்வரும் மார்ச் முதலாம் திகதிமுதல் 11ஆம்திகதிவரை சாதாரணதரப் பரீட்சைகள் நடைபெறவுள்ளதால் மேல்மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் எதிர்வரும் 25ஆம் திகதிமுதல் சாதாரணதர வகுப்புகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

Tue, 01/19/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை