மேய்ச்சல் தரை காணியில் முந்திரிகை செய்கை; தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை

மட்டக்களப்பு - பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிழியாமடு பகுதியிலுள்ள மேய்ச்சல் தரை காணிகளை ஊர்காவல் படையினருக்கு முந்திரிகை செய்கைக்கு வழங்கப்பட்டுள்ளதை தடுத்து நிறுத்துமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.  

கெவிழியாமடு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட காத்தமல்லி தோட்டம் வெட்டிப்போட்டசேனை போன்ற பல பகுதிகள் நீண்டகாலமாக பரம்பரை பரம்பரையாக கால்நடை வளர்ப்புக்காக பயன்படுத்தப்படும் மேய்ச்சல் தரையாக இருந்து வருவதுடன், படுவான்கரை பகுதியில் விவசாய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்போது இங்குள்ள கால்நடைகள் இப்பகுதிகளுக்கு மேய்ச்சலுக்காக கொண்டுசெல்லப்படுவதாக அவர் தெரிவித்தார்.  

இந்நிலையில் தற்போது விவசாய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், தற்போது ஊர்காவல் படையினர் காடுகளை வெட்டி காணிகளை அடைக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதால் கால்நடை வளர்ப்போர் சிக்கல்களை எதிர்நோக்கும் நிலையேற்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் சுட்டிக்காட்டினார்.   அப்பகுதிக்கு   ஞாயிற்றுக் கிழமை (17) சென்ற அவர் மண்முனை தென் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் என்.புஸ்பலிங்கம் உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கால்நடை பண்ணையாளர்களுடன் கலந்துரையாடினார்.  

மாவட்ட நிர்வாகத்துக்குத் தெரியாமல் வன இலாகாவின் அனுமதியுடன் முன்னெடுக்கப்படும் இச்செயற்பாடுகளை தடுத்து நிறுத்த அனைவரும் முன்வரவேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.

(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்) 

Wed, 01/20/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை