மட்டக்களப்பில் அடை மழை; தாழ் நிலப்பிரதேசங்கள் வெள்ளத்தில்

- மைலம்பாவெளியில் அதிக மழை வீழ்ச்சி

கடந்த 12 மணித்தியாலங்களில் மயிலம்பாவெளியில் 124.2 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் மட்டக்களப்பு நகரத்தில் 122.7 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் கிடைக்கப்பெற்றதாக மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்தார்.

அடைமழை காரணமாக மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமுள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த 12 மணித்தியாலங்களில் நவகிரி 67 மில்லிமீற்றர், தும்பங்கேணி 50.2 மில்லிமீற்றர், உன்னிச்சை 54 மில்லிமீற்றர், வாகனேரி 57.3 மில்லிமீற்றர், கட்டுமுறிவு 22 மில்லிமீற்றர், றூகம் 56.1 மில்லிமீற்றர், கிரான் 82.3 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சிகள் கிடைக்கப்பெற்றதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலைய கடமைப்பொறுப்பாளர் தெரிவித்தார்.

இதனால் கோரளைப்பற்று தெற்கு கிரான், போரதீவுப்பற்று, வெல்லாவெளி, ஏறாவூர்பற்று, செங்கலடி, மண்முனை தென்மேற்கு, பட்டிப்பளை போன்ற பகுதிகளில் உள்ள பாதைகளில் மக்கள் போக்குவரத்துத்தடை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நீரேந்து பிரதேசங்களை அண்டிய பொது மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இவ் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பொது இடங்களில் தங்கவைக்கப்படாது. சுகாதார விதிகளுக்கமைவாக உறவினர் நண்பர்கள் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை போரதீவுபற்றில் பல கிராமங்கள்,தாழ்நிலங்கள்,வயல்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் வெல்லாவெளி -மண்டூர் பாதையில் சுமார் 5அடி வெள்ளநீர் பாய்கின்றது.காக்காச்சிவட்டை-ஆனைகட்டிவெளி பாதை,சமூளையடிவட்டை,றாணமடு மாலையர்கட்டு பாதையும் வெள்ளத்தினால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பிரதேச செயலாளர் தெரிவித்தார்.போரதீவுப்பற்று பிரதேச சபையும்,அதன் தொழிலாளர்களும் வெள்ளநீரை வெளியேற்றும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றார்கள்.

வெல்லாவெளி தினகரன் நிருபர்

Sat, 01/16/2021 - 13:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை