இந்திய மீனவர்களின் எல்லை தாண்டும் செயலை முற்றாக தடுப்பதே ஒரே வழி

துன்பகர நிகழ்வின் உண்மைநிலை கண்டறியப்படும்

இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய கடற்றொழில் செயற்பாடுகள் தொடர்பான பிரச்சினை நிரந்தரமாக தீர்க்கப்பட வேண்டுமென்பதை மீண்டும் வலியுறுத்துகின்றேன் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

எது நடக்கக் கூடாதென்று விரும்பினேனோ, துரதிஸ்டவசமாக அது இப்போது நடந்துவிட்டது. உயிரிழந்தவர்கள் இந்திய கடற்றொழிலாளர்களாக இருப்பினும், அவர்களும் என்னுடைய தொப்புள் கொடி உறவுகள்.

இலங்கை கடற்பரப்புக்குள் கடற்றொழிலில் ஈடுபட்டிந்த போது ஏற்பட்ட துன்பகரமான சம்பவத்தில் சிக்கிய நான்கு தமிழக மீனவர்களின் சடலங்களும் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்துகின்றது. இத் துன்பகரமான சம்பவத்தில் முதலில் 04 தமிழக மீனவர்களும் காணாமற்போனதாகவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் 04 பேரின் சடலங்களும் மீடகப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இவ்வாறான இழப்புக்கள் பலவற்றை கடந்து வந்த அனுபவத்தின் அடிப்படையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரதும் உறவினர்களினதும் உணர்வுகளைப் புரிந்து கொள்கின்றேன். அவர்கள் சூழ்ந்திருக்கும் துன்பக் கடலிலிருந்து அவர்கள் மீண்டு வரவேண்டுமென்பதே என்னுடைய எதிர்பார்ப்பாகும்.

இலங்கையின் கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டதிலிருந்து, இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத செயற்பாடுகள் நிறுத்தப்பட்டு இலங்கை கடற்றொழிலாளர்களும் எமது உறவுகளான இந்தியக் கடற்றொழிலாளர்களும் பாதிக்கப்படாத வகையில் இரண்டு தரப்பினரும் இணங்கிக்கொள்ளும் வகையிலான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டுமென்பதை வலியுத்தியே வந்திருக்கிறேன்.

இவ்வாறு வலியுத்தியதுடன் மட்டும் நின்று விடாது, அது தொடர்பான முன்வரைவு ஒன்றை தயாரித்திருந்தேன். கடந்த வருடம் ஜனவரி மாதம் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட போது இந்தியப் பிரதமரிடமும் அந்த முன்வரைவை கையளித்திருந்தேன். இந்தியத் தரப்பினரும் இத் திட்டத்தை வரவேற்றிருந்தனர். எனினும் துரதிஸ்டவசமாக ஏற்பட்ட கொவிட் - 19 காரணமாக அதனை முன்கொண்டு செல்ல முடியவில்லை. அண்மைக்காலமாக இந்தியக் கடற்றொழிலார்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்தே காணப்பட்டன. இச்செயற்பாடுகள் தொடரும் பட்சத்தில் இலங்கை - இந்தியக் கடற்றொழிலாளர்களுக்கிடையில் கடலில் மோதல் ஏற்பட்டு விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்பட்டு விடும் என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தேன்.

கடந்த காலங்களில் நாம் துன்பத்தை சுமந்த வேளைகளில் எல்லாம் எமக்காக உரிமையுடன் குரல் கொடுத்தவர்கள் - எமக்காக துடிப்பதற்கு பாரத தேசம் இருக்கின்றதென்ற நம்பிக்கையை எமக்கும் இன்றும் ஏறபடுத்திக்கொண்டிருப்பவர்கள். அவ்வாறானவர்களுக்கு இன்னல் ஏற்படுவதை என்னால் எவ்வாறான சூழலிலும் தாங்கிக் கொள்ள முடியாது. நடைபெற்ற சம்பவம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

எனினும், இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் நடப்பதை தடுக்கும் நோக்கில் உண்மையில் நடந்தது என்ன? என்பதை அறிந்து கொள்ளுவதற்கு தேவையான நடவடிக்கைகளை பொறுப்புள்ள அமைச்சரென்ற வகையில் மேற்கொண்டுள்ளேன். அதேவேளை, உணர்ச்சிவசப்பட்ட முடிவுகள் எந்தளவிற்கு இழப்புக்களையும் அழிவுகளையும் ஏற்படுத்தும் என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்து கொண்டவனென்ற அடிப்படையில், இந்தியக் கடற்றொழிலாளர்களும் இச்சந்தர்ப்பத்தில் உணர்ச்சிவசப்படாது புத்திசாதுரியமாக எதிகால நடவடிக்கைகளை திட்டமிட வேண்டும் என்பதே என்னுடைய எதிர்பார்ப்பாகும்.

 

 

Sat, 01/23/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை