- பொதுஜன பெரமுன, கண்டி மாவட்ட எம்.பி. வசந்த யாபா பண்டார
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாபா பண்டாரவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை அவர் தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நேற்று (24) இரவு 10.00 மணியளவில், மாவட்ட வைத்திய அதிகாரியினால் இது தொடர்பில் அவருக்கு அறிவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள அவர், தன்னுடன் தொடர்புற்ற அனைவரும் உரிய சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றிய 6ஆவது பாராளுமன்ற உறுப்பினர் இவராவார்.
அவர் கடந்த சில தினங்களாக கண்டி, யட்டிநுவர பிரதேசத்தில் பல்வேறு கூட்டங்களில் பங்குபற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே தயாசிறி ஜயசேகர, ரஊப் ஹக்கீம், வாசுதேவ நாணயக்கரா, பவித்ரா வன்னியராச்சி, பியல் நிஷாந்த ஆகிய ஐவருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டிருந்தது.
இதில், இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, ரஊப் ஹக்கீம் எம்.பி. ஆகியோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த ஆகியோர் தொடர்ந்தும் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
from tkn