வவுனியா தனிமைப்படுத்தல்; 500 பேரின் முடிவுகளின் பின்னரே முடக்கம் தொடர்பாக தீர்மானம்

வவுனியா மாவட்டத்தில் சில பகுதிகளில் தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் 500 பேரது முடிவுகள் காத்திருப்பில் உள்ளன. அவர்களின் பி.சி.ஆர் முடிவுகளின் பிரகாரமே வவுனியா மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களை மீண்டும் வழமை நிலமைக்கு கொண்டுவருவது தொடர்பாக சிந்திக்க முடியும் என வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் மகேந்திரன் தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தின் நிலமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் அவரிடம் வினாவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

வவுனியா நகர் உட்பட பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் பிரகாரம் 156 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதுடன் நகரின் சில பகுதிகள் தனிமைப்படுத்தல் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 500 நபர்களின் முடிவுகள் மாத்திரமே காத்திருப்பில் உள்ளமையினால் அவர்களின் முடிவுகளின் அடிப்படையில் ஒர் சில தினங்களில் வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களை வழமை நிலமைக்கு கொண்டு வருவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

இதேவேளை வவுனியா நகரப்பகுதிகளை சேர்ந்த 16 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நகர வியாபார நிலையங்களில் பணிபுரியும் 13 பேருக்கும் ஆடைத்தொழிற்சாலையை சேர்ந்த 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கையுடன் வவுனியா நகர்பகுதியில் கடந்த ஒருவாரத்தில் மாத்திரம் 172 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றார்.

வவுனியா விசேட நிருபர்

Sat, 01/16/2021 - 15:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை