நான் உயிரோடு இருக்கும் வரை தமிழரசுக் கட்சியுடன் TULF இணையாது

செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரி தெரிவிப்பு

தான் உயிரோடு இருக்கும் வரை தமிழர் விடுதலைக் கூட்டணி இலங்கை தமிழரசுக் கட்சியுடன் எந்த சந்தர்ப்பத்திலும் இணைய மாட்டாதென தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (08) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கூறுகையில் வன்னியில் இறுதி யுத்தத்தில் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு இரா. சம்பந்தனும் சேனாதிராஜாவும் காரணமானவர்கள்.

அவர்கள் நினைத்திருந்தால் 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தை நிறுத்தியிருக்கலாம். ஆனால் அவர்கள் யுத்தத்தை நிறுத்த விரும்பவில்லை. யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது வெளிநாடுகளில் சுகபோக வாழ்க்கை அனுபவித்தவர்கள். எனவே அவர்களின் தலைமையைக் கொண்ட தமிழரசு கட்சியுடன் எந்த காலத்திலும் இணைவதற்கு கட்சியை அனுமதிக்க மாட்டேன்.

ஆனால் இணைப்பதற்கு அவர்கள் தற்போது முயற்சி செய்து கொண்டிருக்கின்றார்கள். எனினும் நான் உயிருடன் இருக்கும் வரை அந்த முயற்சி கைகூடாது. சம்பந்தனும் சேனாதிராஜாவும் தங்களுடைய பதவிகளை துறக்க வேண்டும். ஏனெனில் தமிழ் மக்களுக்கு அவர்கள் துரோகம் இழைத்துள்ளார்கள். தமிழ் மக்கள் இன்றைய நிலையில் இருப்பதற்குக் காரணம் அவர்கள் தான்.

அரவிந்தன் என்னும் எனது கட்சி உறுப்பினர் ஒருவர் தற்பொழுது பின்னாலிருந்து நகர்த்தி விடுகிறார். அதாவது தன்னை கட்சியின் துணைத் தலைவரென கூறி செயற்படும் அரவிந்தன் என்பவர் கடந்த 16 வருடங்களாக லண்டனில் சுகபோக வாழ்க்கையை அனுபவித்து விட்டு தற்போது இங்கே வந்து தன்னை ஒரு மக்கள் மீது அக்கறையுள்ள பிரமுகரென நிரூபிப்பதற்கு செயற்படுகின்றார் .

பருத்தித்துறை விசேட நிருபர்

Wed, 12/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை