சுகாதார தரப்பினரை திக்குமுக்காட வைத்துள்ளதாக Dr.சுதத் சமரவீர கருத்து
கொரோனா வைரஸானது எவ்வித அறிகுறிகளுமின்றி உடலில் எவ்வித மாற்றங்களையும் காண்பிக்காமல் ஆயிரக்கணக்கானோரிடம் பரவியுள்ளது. எனவே தற்போது நபரொருவருக்கு வைரஸ் தொற்று ஏற்படுமாயின் அவருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதா அல்லது புதிய வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை பி.சி.ஆர். பரிசோதனையின் ஊடாகக் கூட உறுதிப்படுத்த முடியாது என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பிரதானி விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,...
ஒக்டோபர் 4 ஆம் திகதி நாட்டில் ஆரம்பமான இரண்டாம் அலை இரு மாதங்களில் தீவிரமாக பரவலடைந்துள்ளது. எனினும் இதனை மேலும் கட்டுப்படுத்த மக்களின் முழுமையான ஒத்துழைப்பு அத்தியாவசியமானதாகும். வைரஸ் அதன் தன்மையை மாற்றி புதிய வகை வைரஸாக இங்கிலாந்தில் மாத்திரம் பரவலடையவில்லை. வேறு நாடுகளிலும் பரவலடைவதற்கான வாய்ப்புக்கள் அதிகமுள்ளன. எனவே இலங்கையில் கொவிட் வைரஸை முற்றாக ஒழிக்க வேண்டியது அத்தியாவசியமானதாகும்.
கொவிட்-19 வைரஸானாது எந்தவொரு அறிகுறிகளும் இன்றி ஆயிரக்கணக்கானோரிடம் பரவியுள்ளது.
எனவே தற்போது வைரஸ் தொற்று ஏற்பட்டாலும் அதன் எந்த வகை தொற்றியுள்ளது என்பதை அறிகுறிகள் மூலம் இனங்காண முடியாது.
அது மாத்திரமல்ல. நாம் வழமையாக முன்னெடுக்கும் பி.சி.ஆர். பரிசோதனைகளின் ஊடாகக் கூட அதனை இனங்காண முடியாது. வைரஸின் உள்ளிடம் யாதென இனங்கண்டால் மாத்திரமே கொவிட்-19 வைரஸா அல்லது புதிய வகை வைரஸா என்பதை கண்டறிய முடியும் என்றார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
from tkn