பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த எந்தவொரு அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை

- விஜித ஹேரத் எம்.பி

தேசிய பொருளாதாரத்துக்கு பெரும் பங்களிப்பு செய்துவரும் பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த எந்தவொரு அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கவில்லை. இருநூறு வருடங்கள் கடந்தும் அந்த மக்களுக்கு சொந்தமாக வீடுகள் இல்லை என்பதுடன் மரணித்தால் அடக்கம் செய்வதற்கு மயானமும் இல்லையென தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுகள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்தாவது,

நாட்டின் தேசிய பொருளாதாரத்துக்கு பாரிய பங்களிப்பு செய்துவரும் தோட்ட மக்களின் வாழ்க்கையை உயர்த்த ஆட்சியிலிருந்து எந்த அரசாங்கமும் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. இன்னும் அவர்கள் லயன் அறைகளிலேயே வாழ்ந்து வருகின்றனர். அடிப்படை வசதி கூட இன்னும் செய்துகொடுக்கப்படாமல் இருக்கின்றது. தற்போதுள்ள கொவிட் பிரச்சினையிலும் அந்த பிரதேசங்களுக்கு சென்று பார்த்தால் நாட்டில் கொவிட் இருக்கின்றதா என்ற நிலையிலேயே அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். பாதுகாப்பு வசதிகள் எதுவும் இல்லை. வைத்தியசாலைகளில் இருக்கவேண்டிய அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. விசேட வைத்தியர்கள் என யாரும் இல்லை.

1987 மாகாண சட்டத்தில் தோட்டங்கள் தொடர்பில் ஒன்றும் இருக்கவில்லை. அதனால் உள்ளூராட்சி, மாகாண சபைகள் தோட்டங்களின் அடிப்படை தேவைகள் தொடர்பில் தேடிப்பார்க்கவில்லை. 2018இல் மேற்கொள்ளப்பட்ட சட்ட திருத்தத்தில் மாகாண நிறுவனங்களுக்கு தோட்டங்கள் உரித்தாகின. ஆனால் தேர்தல்களுக்கு அனைவரும் அவர்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டனர். தற்போதும் இந்த அமைச்சின் நோக்கு மற்றும் இலக்குகள் தொடர்பிலான குறிப்பில் தோட்ட மக்கள் வாழ்வதற்கு வீடு மாத்திரம் அல்ல, அவர்கள் மரணித்தால் அடக்குவது தொடர்பாகவேனும் தெரிவிக்கப்படவில்லை. அந்த மக்களுக்கு என்று பொது மயானம் இன்றைக்கும் இல்லை. யாராவது மரணித்தால் தோட்டத்திலேயே ஒரு இடத்தில் அடக்குவார்கள். அதனால் 200 வருடங்களாக தோட்டங்கள் இருந்து வந்தாலும் எந்த அரசாங்கமும் தோட்ட மக்களின் வீட்டுப் பிரச்சினையை தீர்க்கவும் இல்லை. அவர்கள் மரணித்தால் அடக்கம் செய்வதற்கு தேவையான மயானப் பிச்சினையையும் இதுவரை தீர்க்கவில்லை.தோட்ட மக்களின் சம்பள பிரச்சினையும் இன்னும் அவ்வாறே இருந்து வருகின்றது.

சம்ஷ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Thu, 12/03/2020 - 11:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை