அரசியல் கைதிகள், தோட்டத்தொழிலாளர் பிரச்சினை எனும் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு முஸ்லிம் அரசியல் தலைவர்களும் குரல் கொடுக்க வேண்டும் என மனோ கணேசன் கூறியிருப்பது அரசியல், ஊடக களம் பற்றிய அவரது அறியாமையை காட்டுகிறது என உலமா கட்சி தெரிவித்துள்ளது. இது பற்றி அக்கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மேலும் தெரிவித்ததாவது,
தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என ரணில், மைத்திரி, சஜித், மனோ அரசிடம் உலமா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அது போன்று சில முஸ்லிம் அரசியல்வாதிகளும் பேசியுள்ளனர். இவை பற்றி நிறையவே செய்திகள் ஊடகங்களில் வந்தும் மனோவுக்கு தெரியவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது.
கடந்த அரசாங்கம் என்பது தமிழரும் முஸ்லிம்களும் 98 வீதம் வாக்களித்து, தமிழ், முஸ்லிம் கட்சிகளால் கொண்டு வரப்பட்ட அரசாங்கம். அதில் மனோ கணேசனும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இருந்தார். அவரது கூட்டாளியான ஹக்கீமும் அமைச்சராக இருந்தார். இருந்தும் ஏன் இவர்களால் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியவில்லை? ஏன் தோட்டத் தொழிலாளரின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியவில்லை?
இவர்கள் அமைச்சரவையில் பிரதமர் ரணிலுடன் இருந்து கொண்டு எதனைக் கிழித்தார்கள்?
அந்த ஆட்சியில் மனோ கணேசன் செய்ததெல்லாம் திருகோணமலை சண்முகா கல்லூரியின் முஸ்லிம் ஆசிரியைகளின் ஆடைகளையும் பொகவந்தலாவ பெண் ஆசிரியைகளின் அபாயாக்களையும் கிழித்ததும் அவமானப்படுத்தியதும், கல்முனை பிரதேச செயலக பிரச்சினையை கிளறி தமிழ், முஸ்லிம் முரண்பாட்டை வளர்த்ததுக் கொண்டிருந்ததும்தான்.
இதைத்தான் அந்த ஆட்சிக்கு முட்டுக்கொடுத்த தமிழ் கூட்டமைப்பும் செய்தது.
ஜனாதிபதி கோட்டாபய, பிரதமர் மஹிந்த ஆட்சியில் மலையக மக்களுக்கான ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்க ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதலை வைத்து கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்களில் குற்றம் நிரூபிக்கப்படாத அப்பாவிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என உலமா கட்சி தொடராக அந்த ஆட்சியின் போது வேண்டி நின்றது. அதுவும் நடக்கவில்லை.
from tkn