நிலுவை வழக்குகளின் தாமதம் காரணமாகவே சிறைகள் நிறைந்துள்ளன

- மைத்திரிபால சிறிசேன

நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளின் விசாரணைகளில் காணப்படும் தாமதங்கள் காரணமாகவே சிறைச்சாலைகள் நிறைந்து காணப்படுகின்றன. அதனால் நாட்டில் குற்றங்களை குறைக்க முறையான வேலைத்திட்டம் அவசியமாகுமென முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

கொவிட்19 தொற்று எப்போது முடிவடையுமென எம்மால் கூற முடியாது. கொவிட்19 தொற்றை ஒழிக்க பாதுகாப்பு அமைச்சு, சுகாதாரத் துறையினர் மற்றும் பொலிஸார் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியமாகும்.

சிறைச்சாலைகளிலுள்ளவர்கள் மற்றும் சிறைச்சாலைகளில் உள்ளடக்கக் கூடிய தொகை தொடர்பில் கடந்த சில நாட்களாக பாராளுமன்றில் பேசப்பட்டது. சிறைச்சாலைகளில் காணப்படும் பாரிய நெரிசல்கள் பாரிய பிரச்சினையாகும். சிறைச்சாலைகளிலுள்ள நெரிசல்கள்தான் கைதிகளில் மனதில் விரிசல்களை ஏற்படுத்துகிறது. வழக்கு விசாரணைகளில் காணப்படும் தாமதங்கள் காரணமாகவே சிறைச்சாலைகள் நிறைந்துள்ளன. அதற்கு ஒரு முறையான வேலைத்திட்டம் அவசியமாகும்.

சிறைச்சாலைகளின் சேவைகள் மறுசீரமைக்கப்பட வேண்டும். புதிய முகத்தில் சிறைச்சாலைகளின் சேவைகள் மறுசீரமைக்கப்பட வேண்டும். சிறைச்சாலைகள் திணைக்களம் வலுப்படுத்தப்பட வேண்டும்.

குற்றங்கள் அதிகரிப்பது மற்றும் சிறைச்சாலைகளுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.சிறைச்சாலைகளிலேயே குற்றவாளிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டாமையால் காலம் செல்லச் செல்ல குற்றங்கள் குறைந்துள்ளன.

சம்ஷ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Fri, 12/04/2020 - 13:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை