முஸ்லிம்கள் கேட்பது ஈழம் அல்ல அடக்கம் செய்யும் உரிமையையே!

- 197 நாடுகளில் வழக்கிலுள்ள நடைமுறை மீறப்படுவதாக இஷாக் ரஹ்மான் MP குற்றச்சாட்டு

கொரோனா வைரஸ் தொற்றால் மரணிப்பரை உலகில் உள்ள 197 நாடுகள் அடக்கம் செய்யும்போது, இலங்கையில் மாத்திரம் அந்த நடைமுறை ஏன் பின்பற்றப்படுவதில்லை எனக் கேள்வியெழுப்பிய இஷாக் ரஹ்மான் எம்.பி, முஸ்லிம்கள் ஈழத்தைக் கேட்கவில்லை.

கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களை (ஜனாஸாக்களை) அடக்கம் செய்ய வேண்டுமென்றே கேட்கிறார்கள். இதனால் சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமானப் பாதிப்புக்களும் ஏற்படாது என்றார்.

சுற்றாடல், வனஜீவராசிகள், வனப் பாதுகாப்பு அமைச்சின் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், பிரித்துக் கேட்கவில்லை. நாட்டுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியது இல்லை. நாட்டின் அமைதிக்கும் பாதிப்பு ஏற்படுத்தியதில்லை. எனினும் முஸ்லிம்களின் பெயரைப் பயன்படுத்தி சிலர் நாட்டுக்குப் பாதிப்பை ஏற்படுத்தினார்கள்.

கொரோனா வைரஸால் உயிரிழக்கும் முஸ்லிம்கள் உடல்களை அடக்கம் செய்வதால் யாருக்கும் எந்தவிதமான பாதிப்புக்களும் ஏற்படாது என தொற்று நோய் விசேட நிபுணர் நிஹால் அபேசிங்க கூறியுள்ளார். முஸ்லிம்கள் ஒருபோதும் ஈழத்தையோ, நாட்டைப் பிரித்து தருமாறோ கேட்கவில்லை. எங்களது மத சம்பிரதாயங்களின்படி உயிரிழப்போரை அடக்கம் செய்வது வழக்கமாக இருக்கிறது. எனவே, இதனால் சுற்றுச் சூழலுக்கு எந்தவிதமான பாதிப்புக்களும் ஏற்படப்போவதில்லை. எனவே, இது தொடர்பில் ஜனாதிபதி, சபாநாயகர் என அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்' எனக் கேட்டுக்கொண்டார்.

Wed, 12/09/2020 - 15:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை