கல்வித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் கொரோனா தொற்றை தடையாக கொள்ள வேண்டாம்

- ஜனாதிபதி கல்வித்துறை அதிகாரிகளிடம் தெரிவிப்பு

முன்பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை கல்வித்துறை முன்னேற்றத்திற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் கோவிட்19 நோய்த்தொற்றை தடையாக கொள்ளவேண்டாமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கல்வித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

மனிதவள அபிவிருத்தி என்பது அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும். நாட்டின் எதிர்கால தலைமுறையினரை உற்பத்தித் திறன்மிக்க பிரஜைகளாக உருவாக்க அவர்கள் புதிய அறிவு மற்றும் திறன்களைக் கொண்டிருக்க வேண்டும். அதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்களுக்கு தற்போதைய நிலைமைக்கு மத்தியில் இடையூறு ஏற்படக்கூடாது என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.

கல்வி அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள அனைத்து இராஜாங்க அமைச்சுகளும் எதிர்பார்க்கப்பட்ட இலக்குகளை அடைவதற்காக எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து மீளாய்வுசெய்யும் வகையில் ஜனாதிபதி அலுவலகத்தில் (09) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

ஒரு தேசிய கல்விக் கொள்கையை விரைவாக உருவாக்குவதற்கு “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கை திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. சர்வதேச தரத்திற்கு ஏற்ப தயாரிக்கப்படும் குறிப்பிட்ட குறிக்கோளுடன் கூடிய தனிப் பாடத்திட்டத்தின் கீழ் முன்பள்ளி முதல் பட்டப்படிப்பு வரை கல்வி முறைகளை உருவாக்குவது மற்றொரு நோக்கமாகும்.

இலக்குகளை அடைந்துகொள்ள கல்வி அமைச்சு மற்றும் அதன் கீழ் வரும் கல்வி சீர்திருத்த, திறந்த பல்கலைக்கழகங்கள், தொலைக் கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு, அறநெறிப் பாடசாலைகள், பிக்கு கல்வி, பிரிவேனா மற்றும் பௌத்த பல்கலைக்கழகங்கள், இராஜாங்க அமைச்சு, பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்ப கல்வி, பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள், கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சு மற்றும் திறன் விருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சு ஆகியன முன்னெடுத்துள்ள திட்டங்களை ஜனாதிபதி தனித்தனியாக ஆராய்ந்தார்.

Fri, 12/11/2020 - 10:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை