பாகிஸ்தான் மருத்துவமனை ஒன்றில் ஒட்சிசன் விநியோகத்தில் ஏற்பட்ட பற்றாக்குறையால் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஆறு நோயாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
பெஷாவர் நகரில் அமைந்துள்ள அரசாங்க மருத்துவமனையில் மருத்துவ ரீதியாகப் பயன்படுத்தப்படும் ஒட்சிசனுக்கு பற்றாக்குறை இருந்ததாக நம்பப்படுகிறது. 200க்கும் மேற்பட்ட நோயாளிகள் பல மணி நேரத்திற்கு குறைந்த ஒட்சிசன் இருப்புடன் விடப்பட்டனர். நோயாளிகளில் கிட்டத்தட்ட 100 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள்.
மருத்துவமனையின் கவனக்குறைவால் அந்தச் சம்பவம் நேர்ந்ததாகவும் அதனை ஒரு குற்றச்செயலாக வகைப்படுத்தலாம் என்றும் மாநில சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.
இருப்பினும் மருத்துவ ரீதியாகப் பயன்படுத்தப்படும் ஒட்சிசன் விநியோகிக்கும் நிறுவனம் தேவைக்கு ஏற்ப விநியோகிக்கவில்லை என்று மருத்துவமனையின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஒட்சிசன் சிலிண்டர்களை பணம் கொடுத்து வாங்கும்படி நோயாளர்களின் உறவினர்களிடம் மருத்துவமனை ஊழியர்கள் கடைசி நேரத்தில் கேட்டுள்ளனர். எமது நோயாளிகளின் உயிரை காப்பதற்கு மருத்துவமனை ஊழியர்களிடம் மன்றாடியதாக உறவினர் ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
எனினும் தாமதித்த ஒட்சிசன் விநியோகங்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையை வந்தடைந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதோடு மருத்துவமனை பணிப்பாளர் மற்றும் மேலும் பல ஊழியர்களும் ஏற்கனவே பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் 400,000க்கும் மேற்பட்ட வைரஸ் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
8,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் கிட்டத்தட்ட நிரம்பியுள்ளன.
from tkn