இணைய கல்வியை இலவசமாக பெற்றுக் கொடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

அனைத்து மாணவர்களுக்கும் இணைய கல்வியை இலவசமாக பெற்றுக் கொடு என அரசாங்கத்தை வலியுறுத்தி மக்கள் விடுதலை முன்னணி திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டது.

மக்கள் விடுதலை முன்னணி திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் அருண் ஹேமச்சந்திரா தலைமையில் நேற்று (18) இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றது.

மாணவர்களின் கல்விக்காக இலத்திரனியல் ஊடகங்களில் வழங்கப்படும் சந்தர்ப்பங்களை அதிகரி, அனைத்து மாணவர்களுக்கும் இணையக்கல்வியினை இலவசமாய் பெற்றுக் கொடு, பிள்ளைகளின் கல்வி முடக்கம், உடனே தீர்வைப் பெற்றுக் கொடு போன்ற பதாகைகளை ஏந்தியவாறு சமூக இடைவெளியைப்பேணி 40-க்கும் மேற்பட்டோர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதில் கருத்து தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணி திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் அருண் ஹேமச்சந்திர, இலங்கையில் கல்விக்காக 6 வீதம் மொத்த தேசிய உற்பத்தியில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றது. எனினும் இந்த நிலைமை இன்னும் மோசமாக விரிவடைந்திருக்கிறது.

காரணம் கொரோனா தொற்று நோயின் பின்னர் பாடசாலைகள் முடக்கப்பட்டு இருப்பதன் காரணமாகவும் சில இடங்களில் இணைய வசதிகள் இல்லாமையினாலும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அனைவருக்கும் இலவசமாக இணைய வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் எனவும் இதன்போது அவர் தெரிவித்தார்.

(ரொட்டவெவ குரூப் நிருபர்)

Sat, 12/19/2020 - 15:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை