சமூகம் மீள்பரிசீலனை செய்ய வேண்டுமென்கிறார் இம்ரான் எம்.பி

முஸ்லிம் கட்சிகள் நமக்குத் தேவையா என்பதை சமூகம் மீள்பரிசீலனை செய்ய வேண்டுமெனத் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப்பினால் பல்வேறு காரணங்களை முன் வைத்து முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. அப்போது இதன் அடிப்படை குர்ஆன்,ஹதீஸ் என்று கூறப்பட்டது.

இதனால் முஸ்லிம் மக்கள் மத்தியில் இக்கட்சிக்கு அமோக ஆதரவு வழங்கப்பட்டது. அதிகாரத்தைப் பெற்ற தலைவர் அஷரப் தன்னால் முடியுமான பல பணிகளைச் சமூகத்துக்காகவும், இந்நாட்டுக்காவும் செய்தார். இவை வரலாற்றுப் பதிவுகளாக உள்ளன. அவரது மரணத்தைத் தொடர்ந்து கட்சியின் அடிப்படை என்று கூறப்பட்ட குர்ஆன் ஹதீஸ் வழிகாட்டல்கள் ஓரங்கட்டப்பட்டன.

பின்னர் எந்தக் கட்சி ஆட்சிக்கு வருகிறதோ அந்தக் கட்சியோடு சேர்ந்து அமைச்சு, இராஜாங்க அமைச்சு, பிரதி அமைச்சு, இணைத்தலைமை எனப் பல வரப்பிரசாதங்களைப் பெற்று அனுபவித்து வந்தனர்.

முழு நாட்டுக்குரிய அமைச்சுப் பதவியைப் பெற்றாலும் தங்களுக்குரிய பிரதேசத்துக்கான அமைச்சுப் பதவியாக அதனைக் கருதி தத்தமது பிரதேசத்தை மட்டும் அபிவிருத்தி செய்யத் தொடங்கினார்கள்.

இதனால் சிங்கள, தமிழ் சமுகங்களிலே முஸ்லிம் சமூகம் பற்றிய தப்பெண்ணம் தோன்றத் தொடங்கியது. பெரிய கட்சியோடு இணைந்து போட்டியிட்டதனால் சிங்கள, தமிழ் மக்களும் அக்கட்சிக்கு வாக்களித்தனர்.

இந்த வாக்குகளையும் பெற்று பாராளுமன்ற உறுப்பினரானாலும் நிதி ஒதுக்கீடுகள், ஏனைய ஒதுக்கீடுகளில் சிங்கள தமிழ்,பகுதிகளுக்கு ஒரு சதமேனும் ஒதுக்கப்படவில்லை.இது நமது சமுகத்தைப் பற்றிய தப்பெண்ணத்தைச் சகோதர இன மக்களிடையே இன்னும் அதிகரித்தது.

இவற்றைத் தொடர்ந்து அவதானித்து வந்த பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் முஸ்லிம் சமூகத்தைப் பற்றிய தப்பெண்ணம் வலுப்பெற்றது.

இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சிலர் தப்பெண்ணத்தை மேலும் வலுப்படுத்தினர்.

இதனால் இலகுவாக அது வளர்ந்து வந்தது. அதன் பிரதிபலிப்புக்களில் ஒன்று தான் இன்று நமது ஜனசாக்கள் பலாத்காரமாகச் சாம்பலாக்கப்பட்டு வருகின்றமையாகும்.

இப்போது கூட சுயநலத்தை மையமாக வைத்து ஆளுங்கட்சியோடு இணைந்துள்ள முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் போன்ற கட்சிகளால் நமது இதை காப்பாற்ற முடியவில்லை.

அது தொடர்பாக தமது எதிர்ப்பைக்கூட வெளிக்காட்ட முடியவில்லை. காரணம் அவர்களுக்கு வேண்டியது எல்லாம் கொடுக்கப்பட்டாயிற்று. இதனால் உரிமைகள் பற்றி வாய் திறக்க முடியாது.

எனவே, இது பற்றி நாம் சிந்திப்போம். நமது பாமர மக்களுக்கும் இந்த நிலையை எத்திவைப்போம். அடுத்து வரும் தேர்தல்களில் இக்கட்சிகளுக்கு வாக்களித்து இன்னும் நமது சமூகத்தின் நிலையை மோசமாக்காமல் இருக்க முயற்சிப்போம் என அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

திருமலை மாவட்ட விசேட நிருபர்

 

 

Mon, 12/28/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை