தோட்டத் தொழிலாளர்களின் தொழில் வழக்குகள் நிலுவையில்

- மருதபாண்டி ராமேஷ்வரன் எம்.பி

தோட்டத் தொழிலாளர்கள் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள பெருந்தொகையான தொழில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. புதிய சட்டங்களை உருவாக்கி அவற்றுக்கு தீர்வை வழங்க தொழில் அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2021 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் நீதி அமைச்சு மற்றும் தொழில் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டுக்கு அதிகமான வருமானத்தை பெற்றுக் கொடுப்பவர்களாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இருக்கின்றனர். பெருந் தோட்டங்களை நிர்வகிக்கும் கம்பனிகள் நடத்தைகள் தொடர்பில் தொழில் அமைச்சருக்கு நன்றாகத் தெரியும். பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலேயே தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பெருந்தோட்டங்கள் கம்பனிகளுக்கு கையளிக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் அனைத்து வசதிகளும் இருந்தன. ஆனால், தற்போது அவ்வாறு இல்லை.

பெருந்தோட்டங்களை உருவாக்கிய தொழிலாளர்களையும் அந்தத் தொழிலையும் கௌரவிக்கும் வகையிலும் தொழில் அமைச்சர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தொழிலாளர்கள் பணிப்புரியும் தளத்தில் குளவிக் கொட்டு, பாம்புக் கடி மற்றும் சிறுத்தை தாக்கமென பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.

இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகளை வழங்க வேண்டும். குளவிக்கொட்டில் இருந்து பாதுக்காக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் சில வேலைத்திட்டங்களை தயாரித்துள்ளார். பாதுகாப்பு உடைகள் வழங்குவது தொடர்பில் நடவடிக்கைகளை எடுத்துள்ளார். ஆகவே, அதற்கு தொழில் அமைச்சு ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் என்றார்.

சம்ஷ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Thu, 12/10/2020 - 14:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை