ஹக்கீமின் மின்னஞ்சலுக்கு ஐ.நா. அதிகாரி பாராட்டு

மாலைதீவில் அடக்கம் செய்யும் விவகாரம்;

இலங்கையிலேயே வாழ்ந்து, மரணிக்கும் கொவிட் – 19 தொற்றுக்குள்ளானவர்களின் ஜனாஸாக்களை இங்கேயே நல்லடக்கம் செய்ய வேண்டுமென்பதை வலியுறுத்தி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், மாலைதீவு உயர்ஸ்தானிகருக்கு அனுப்பிய மின்னஞ்சல் குறித்து அவருக்கு ஐக்கிய நாடுகள் சபையின் சமய சுதந்திரம் மற்றும் நம்பிக்கை தொடர்பான விசேட அறிக்கையாளர் அஹ்மத் ஷஹீட் நன்றி தெரிவித்துள்ளார்.

அவ்வாறு நன்றி தெரிவித்து பிரஸ்தாப ஐ.நா விசேட அறிக்கையாளர் முஸ்லிம் காங்கிரஸ்  தலைவருக்கு அனுப்பி வைத்துள்ள மின்னஞ்சலில், மாலைதீவு உயர்ஸ்தானிகருக்கான அந்த மின்னஞ்சலை பொதுத் வெளியில் பகிர்ந்ததையும் வரவேற்றுள்ளார்.

இந்த விவகாரம் குறித்துக் கருத்து தெரிவித்துள்ள விசேட அறிக்கையாளர் அஹ்மத் ஷஹீட்,

இவ்வாறாக சடலங்களை பலவந்தமாக எரியூட்டுவதைக் கண்டித்து தாமும் இவ்வாண்டு ஏப்ரல் மாதத்திலேயே இலங்கை அரசா ங்கத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தாம் சென்ற ஆண்டு இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த போது இங்கிருந்த நிலைமைகள் தொடர்பில் அறிக்கையொன்றை தயாரித்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயத்தில் தாம் அதிக கரிசனை கொண்டிருப்பதாகவும் அவர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு அனுப்பிய மின்னஞ்சலில் மேலும் தெரிவித்துள்ளார்.

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூன் அப்துல் கையூம் பதவியிலிருந்த காலத்தின் பிற்பகுதியில் 2005ஆம் ஆண்டு தொடக்கம் 2007 ஆம் ஆண்டு வரையிலும், பின்னர் முஹம்மத் நஷீட் ஜனாதிபதியாக இருந்த 2008ஆம் ஆண்டு தொடக்கம் 2010 ஆம் ஆண்டு வரையிலும், தாம் அந்நாட்டின் வெளிநாட்டமைச்சராக கடமையாற்றிய போது, முன்னாள் அமைச்சரான ஹக்கீமை பல தடவைகள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளதையும் அஹ்மத் ஷஹீட் நினைவூட்டியுள்ளார்.

 

Fri, 12/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை