பேலியகொடை மீன் சந்தை மீண்டும் நாளை திறப்பு

நிலைமையை நேரில் சென்று டக்ளஸ் ஆராய்வு

பேலியகொடை மீன் சந்தையில் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சந்தை செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கைகள் மேற்கொண்டிருந்த நிலையில் நாளை புதன்கிழமை (16) மீண்டும் சந்தையை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இப் பகுதிக்கு நேற்று நேரடி விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் தொடர்பாக கள ஆய்வுகளை மேற்கொண்டார். இதனடிப்படையில் முதற்கட்டமாக நாளை சந்தை நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது

பேலியகொட மத்திய மீன் சந்தையில் கொரோனா பரவல் ஏற்பட்டிருக்கின்றமை உறுதிப்படுத்தப்பட்டமையை தொடர்ந்து கடந்த ஒக்டோபர் 21 ஆம் திகதி சந்தை செயற்பாடுகள் தற்காலிகமான இடைநிறுத்தப்பட்டிருந்தன.

நாடளாவிய ரீதியிலிருந்து வருகின்ற கடற்றொழிலாளர்களும் கடலுணவு வியாபாரிகளும் பேலியகொடை மீன் சந்தையை தமது தொழில் நடவடிக்கைகளுக்கு பேலியகொடை மீன் சந்தையைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மினுவான்கொடை ஆடைத் தொழிற்சாலையுடன் தொடர்புடைய சிலரின் ஊடாகப் பரவியதாக தெரிவக்கப்படும் நிலையில் பேலியகொட கொத்தணி மூலம் நாட்டின் பல பாகங்களிலுமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

அதேவேளை, கடலுணவு வியாபாரமும் பாரிய வீழ்ச்சியடைந்து கடற்றொழில்சார் செயற்பாட்டாளர்களின் வாழ்வாதாரமும் பாதிப்படைந்திருந்தது. இதனால் மீன் சந்தையில் கொரோனா பரவல் வீரியமடைவதற்கு ஏதுவான காரணிகள் தொடர்பாக ஆராய்ந்து, அவற்றை களைவதற்காக கடற்றொழில் அமைச்சரினால் துறைசார் நிபுணர் குழு அமைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

துறைசார் குழுவினரின் பரிந்துரைக்கமைய முன்னேற்பாடுகள் மேகொள்ளப்பட்டுள்ள நிலையில் நாளை புதன்கிழமை மட்டுப்படுத்தப்பட்டளவில் சந்தை செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

Tue, 12/15/2020 - 09:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை