அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் போராட்டம்

கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் கோரிக்கை

சிறைச்சாலைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உடனடியாக உறுதிப்படுத்தக் கோரியும், அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் நேற்று கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.

‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பின் ஏற்பாட்டில் காலை 10.00 மணி முதல் நல்லூர் கந்தசுவாமி கோயில் பின்புறமாகவுள்ள நல்லை ஆதீன முன்றிலில் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இது தொடர்பில் ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் பலருக்குக் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அவர்களின் உறவுகளின் வேண்டுகோளுக்கிணங்க சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உடனடியாக உறுதிப்படுத்தக் கோரியும், அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளோம்.

எமது உறவுகளின் விடுதலைக்காக இன, மத, கட்சி பேதமின்றி அனைவரும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

தற்போது நாட்டில் அதிகரித்துள்ள கொரோனா வைரஸ் தொற்றின் அபாயத்தைக் கருத்தில் கொண்டு,சமூக இடைவெளியைப் பின்பற்றியும், சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடித்தும் இந்தப் போராட்டத்தில் இணைந்து கொண்டனர்.

 

Tue, 12/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை