சிவனொளிபாதமலை பருவகால யாத்திரை ஆரம்பம்

- யாத்திரையில் பங்கேற்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்

சிவனொளிபாதமலை பருவகால யாத்திரை 2021ஆம் ஆண்டுக்கான பருவகால யாத்திரை பூரணை தினமான 29.12.2020 நேற்று ஆரம்பமாகியுள்ளது. இதன்படி புனித சின்னங்களை எடுத்துச்செல்லும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

இரத்தினபுரி பெல்மதுளை கல்பொத்த ரஜமகா விகாரையிலிருந்து புனித விக்கிரகங்கள் நல்லதண்ணி பாதை வழியாக நேற்றுமுன்தினம் நள்ளிரவு மலையுச்சிக்கு எடுத்து செல்லப்படவுள்ளதாக சிவனொளிபாதமலை நாயக்க தேரர் பெங்கமுவே தம்மதின்ன தெரிவித்தார்.

அந்தவகையில் பலாங்கொடை - பொகவந்தலாவ வீதியில் ஊர்வலம் பயணித்து, அவிசாவளை, ஹற்றன் – நல்லதண்ணி ஊடாக சிவனொளிபாதமலைக்கு ஒரு ஊர்வலம் சென்றது. மற்றைய ஊர்வலம் குருவிட்ட - இரத்தினபுரி வீதி ஊடாக பயணித்தது. மற்றது, பெல்மதுளை இரத்தினபுரி – ரஜமாவத்தை வழியாக சென்றது.

இதேவேளை சிவனொளிபாதமலைக்கு பிரவேசிக்கும் அனைத்து மார்க்கங்களும் பொதுசுகாதார பரிசோதகர்களினால் 24 மணிநேர கண்காணிப்புக்குட்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், சிவனொளிபாதமலை பருவகால யாத்திரையில் பங்கேற்கும் பக்தர்களுள் ஒரே தடவையில் 200பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் யாத்திரையில் பங்கேற்கும் அடியார்கள் தத்தமது பிரதேச செயலகங்களில் பதிவு செய்வதுடன் தனிமைப்படுத்தப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவில்லை என்பதினை பொதுசுகாதார பரிசோதகர்களினால் உறுதிப்படுத்தப்பட்ட அனுமதி பத்திரமொன்றை தம்வசம் வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை எதிர்வரும் ஜனவரி மாதம் சிவனொளிபாதமலை பருவகால யாத்திரையில் பங்கேற்பதை தவிர்த்து செயற்படுமாறு நுவரெலியா மாவட்ட செயலகம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(ஹற்றன் சுழற்சி , நோட்டன் பிரிட்ஜ் நிருபர்கள்)

Wed, 12/30/2020 - 11:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை