மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய காணி அபகரிப்பு முயற்சி

நேற்று களத்தில் இறங்கிய சார்ள்ஸ் எம்.பி

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான காணியை 'மாதோட்ட' விகாரையின் பிக்கு அபகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் நேற்று காலை குறித்த பகுதிக்குச் சென்று பார்வையிட்டுள்ளார்.

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான 5 ஏக்கர் காணி சைவ மங்கையர் கழகத்துக்கு 99 வருட குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டது.

இந்த காணியானது நீண்ட காலமாக திருக்கேதீஸ்வர ஆலயத்தின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளது.

இக் காணியானது நாட்டில் ஏற்பட்ட இடப் பெயர்வு காரணமாக இராணுவம் அவ் இடத்தில் நிலை கொண்டது.அதன் பின்னர் குறித்த காணி திருக்கேதீஸ்வர ஆலயத்திடம் மீளவும் கையளிக்கப்பட்டது.

இந்த நிலையில் அவ்விடத்தில் அமைக்கப்பட் விகாரை ஆலய காணியிலும் தனியார் காணியிலும் அமைக்கப்பட்டிருந்தது.

மிகுதி காணி ஆலய நிர்வாகத்தின் பராமரிப்பில் இருந்தது. இன் நிலையில் கடந்த தினங்களாக விகாரையில் பிக்கு மிகுதி காணியை அபகரிக்கும் நடவடிக்கையினை மேற்கொண்டு வந்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்வில் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகம் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

நேற்று காலை குறித்த பகுதிக்குச் சென்று பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் காணி அபகரிப்பு தொடர்பாக துரித நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக தெரிவித்தார்.இதன் போது மன்னார் பொலிஸார், ஆலய நிர்வாகத்தினர்,ஆலய பிரதம குரு ஆகியோரும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் குறூப் நிருபர்

Wed, 12/30/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை