'வேலைத்திட்டத்துடன் மீண்டும் கிராமத்திற்கு' நாடு முழுவதும் செயற்படுத்த பிரதமர் பணிப்பு

கிராமிய மற்றும் அரை நகர்ப்புற வாசிகளின் உண்மையான தேவைகள் மற்றும் முன்னுரிமைகள் அடையாளம் காணப்பட்ட 'வேலைத்திட்டத்துடன் மீண்டும் கிராமத்திற்கு' செயல்திட்டத்தை எதிர்வரும் 14ஆம் திகதி முதல் நாடு முழுவதும் செயற்படுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று அறிவுறுத்தினார்.

பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிதி அமைச்சின் ஆலோசனை செயற்குழுக் கூட்டத்திற்கு தலைமை வகித்து பிரதமர் இவ்வாறு வலியுறுத்தினார்.

கிராமிய மற்றும் அரை நகர்ப்புற பிரதேசங்களில் காணப்படும் உண்மையான தேவைகளை கண்டறிந்து இத் திட்டத்தை செயற்படுத்துவதற்கு எதிர்வரும் 14ஆம் திகதி முதல் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

கொவிட்-19 தொற்று நிலைமைக்கு மத்தியில் நாட்டின் சுற்றுலாத்துறை பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளதாகவும், அதற்கு நிதி அமைச்சின் ஆதரவை பெற்றுக் கொடுக்க வேண்டுமென்றும் இதன்போது பரிந்துரைக்கப்பட்டது.

அது தொடர்பில் நிதி அமைச்சு மேற்கொண்ட பல நடவடிக்கைகள் குறித்து நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகலவினால் தெளிவுபடுத்தப்பட்டது.

இலங்கையர்களில் 72 வீதமான கிராமப்புற மற்றும் அரை நகர்ப்புற மக்களின் வாழ்க்கை மட்டத்தில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் அதிகாரத்துவத்திற்கன்றி மக்களின் அத்தியாவசிய முன்னுரிமைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென இதன்போது பரிந்துரைக்கப்பட்டதுடன், அதற்கமைய இராஜாங்க அமைச்சர்களான அஜித் நிவாட் கப்ரால் மற்றும் ஷெஹான் சேமசிங்க ஆகியோரின் ஆதரவுடன் முன்னுரிமை பட்டியலொன்றை தயார்ப்படுத்துவதற்கு நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல உடன்பாடு தெரிவித்தார்.

ஓய்வூதிய கொடுப்பனவு முரண்பாடுகள் தொடர்பிலும் மற்றும் சமுர்த்தி அதிகாரிகளுக்கு தேர்தலுக்கான வேட்புமனுக்களை வழங்குவது தொடர்பிலும் நிதி அமைச்சர் மற்றும் கமத்தொழில் அமைச்சர் ஆகியோரின் ஒத்துழைப்புடன் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பித்து அப்பிரச்சினை விரைவில் தீர்க்கப்படுமென இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார முன்வைத்த ஓய்வூதிய கொடுப்பனவு முரண்பாடுகள் தொடர்பிலான பிரச்சினைக்கு விரிவான பதிலை முன்வைத்த நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, சம்பளம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவு ஆகியவற்றுக்கு மாத்திரம் அரசாங்கம் 1.1 டிரில்லியன் ரூபாவை செலவிடுவதாக சுட்டிக்காட்டினார்.

Tue, 12/08/2020 - 13:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை