சமஷ்டி தீர்வு என சம்பந்தன் மீண்டும் தமிழரை ஏமாற்றுகிறார்

TULF செயலாளர் ஆனந்த சங்கரி குற்றச்சாட்டு

மாகாண சபைக்கான தேர்தல் நெருங்குவதால் தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவதற்காக சம்பந்தன் சமஷ்டி என்ற வார்த்தையை பேச தொடங்கிவிட்டார். தற்போதும் சமஷ்டி தீர்வுதான் என்று கூறி, இரா.சம்பந்தன் மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்ற ஆரம்பித்துவிட்டாரென தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,  தற்போது சமஷ்டி என்ற பதம் சிங்களத் தலைமைகளுக்கும், சிங்கள மக்களுக்கும் பிடிக்காத ஒரு சொல்லாகிவிட்டது. ஆரம்பத்தில் சமஷ்டி என்ற வார்த்தையை சிங்களத் தலைமைகள் தான் பேச ஆரம்பித்தனர். அது ஒரு காலம். பின் அவர்களே தனிச் சிங்கள சட்டம் கொண்டு வந்தார்கள். முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுக்கு வரும் வரை சமஷ்டி நோக்கித்தான் அனைவரும் செயற்பட்டோம். அதன் பின்னர் இன்று வரை நடக்கும் சம்பவங்களை சம்பந்தன் மறந்துவிட்டாரா?

2015ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தல் மூலம் நல்லிணக்கத்திற்கான ஒரு நல்லாட்சியை மக்கள் உருவாக்கி, ஒரு தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டது. இதற்கும் தாங்கள் தான் காரணமென சம்பந்தன் தம்பட்டம் அடித்தார். அந்த நல்லாட்சி முழுவதும் சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராக நியமனம் செய்யப்பட்டார். ஒரு நாட்டை ஆளும் அரசு வருடாவருடம் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த உலகின் ஒரேயொரு எதிர்க்கட்சித் தலைவரென்ற பெருமையையும் பெற்றுக் கொடுத்தவர். அன்றைய அரசின் ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு மிகவும் நெருக்கமான சகாவாக இருந்து எதிர்க்கட்சித் தலைவர் என்ற கதிரையை அலங்கரித்தவர். அப்போது இந்த சமஷ்டியைப்பற்றி பேசாது அந்த தீர்வை பெற்றுத்தர எந்த முயற்சியும் எடுக்காமல் தனது எதிர்க்கட்சித் தலைவரென்ற பதவி பறிபோய்விடும் என்ற பயத்தில் வாய்மூடி மௌனமாக இருந்துவிட்டு, இன்று சமஷ்டி பற்றி பேசுகின்றார். எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவி அவர் கண்களை மறைத்துவிட்டது.

2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சமஷ்டி கொள்கையை வலியுறுத்தி அன்றைய ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவும், ஒற்றையாட்சியை வலியுறுத்தி மஹிந்த ராஜபக்ஷவும் களத்தில் இறங்கி போட்டியிட்டனர். 49வீத வாக்குகளை ரணில் விக்கிரமசிங்க பெற்றார். அந்த நேரத்தில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு வாக்களிக்க வேண்டாம் என்று கூறி தமிழ் மக்களை வாக்களிக்கவிடாமல் சம்பந்தன் குழுவினர் பிரசாரம் செய்ததால் தமிழ் மக்கள் வாக்களிக்காமலே சிங்கள மக்கள் 49வீத சமஷ்டிக்கு ஆதரவாக வாக்களித்தனர். தமிழ் மக்களை அந்த நேரத்தில் வாக்களிக்க அனுமத்தித்திருந்தால் ரணில் விக்கிரமசிங்க மூன்றில் இரண்டு வீத பெரும்பான்மை ஆதரவுடன் வெற்றி பெற்றிருப்பார்.

அந்த வராலாற்றுத் துரோகத்தை தமிழ் மக்களுக்கு செய்த சம்பந்தன் இன்று சமஷ்டி பற்றி பேசுகின்றார். இது பற்றி பேச அவருக்கு என்ன அருகதை இருக்கின்றது. தமிழ் மக்களுக்கு சம்பந்தனின் கபட நாடகம் எப்போதும் புரிவதில்லை. அதனால் தான் அவரும் அதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றார்.

பதவி சுகத்தில் மூழ்கி இதுவரை அனுபவித்த சலுகைகள் போதும் இனியாவது தமிழ் மக்களை நிம்மதியாக வாழ விடுவார் என்று எண்ணுகின்றேன். அதுமட்டுமல்லாமல் ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமைப் பேரவை மாநாட்டிற்கு வருடாவருடம் காவடி எடுக்கும் சம்பந்தன் தலைமை இந்த வருடம் எதைக் கொண்டு செல்லப்போகின்றார்கள்?

 

Tue, 12/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை