கட்சி தொடங்கும் எண்ணம் இல்லையென ரஜினி அறிவிப்பு

ட்விட்டரில் தனது கவலையை வெளியிட்டார்

உடல்நல காரணங்களை முன்வைத்து, அரசியலுக்கு வர முடியாததற்கான காரணத்தை அறிக்கை மூலமாக வெளியிட்டுள்ளார் ரஜினிகாந்த்.

மருத்துவமனையிலிருந்து சென்னை திரும்பிய ரஜினி அரசியலுக்கு வருவாரா என்ற சந்தேகம் வலுத்தது. தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினி வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்: 'என்னை வாழவைக்கும்‌ தெய்வங்களான தமிழக மக்களுக்கு எனது அன்பான வணக்கம்‌, ஜனவரியில்‌ கட்சி தொடங்குவேன்‌ என்று அறிவித்து மருத்துவர்களின்‌ அறிவுரையையும்‌ மீறி 'அண்ணாத்த' படப்பிடிப்பில்‌ கலந்து கொள்ள ஹைதராபாத்‌ சென்றேன்‌. கிட்டத்தட்ட 120 பேர்‌ கொண்ட படக்‌ குழுவினருக்கு தினமும்‌ கொரோனா பரிசோதனை செய்து ஒவ்வொருவரையும்‌ தனிமைப்படுத்தி, முகக்‌ கவசம்‌ அணிவித்து, மிகவும்‌ ஜாக்கிரதையாகப் படப்பிடிப்பை நடத்தி வந்தோம்‌.

இவ்வளவு கட்டுப்பாட்டோடு இருந்தும்‌ 4 பேருக்கு கொரோனா இருக்கிறது என்று தெரிய வந்தது. உடனே இயக்குநர்‌ படப்பிடிப்பை நிறுத்தி எனக்கு உட்பட அனைவருக்கும்‌ கொரோனா பரிசோதனை செய்வித்தார்‌. எனக்கு கொரோனா நெகடிவ்‌ வந்தது. ஆனால்‌ எனக்கு இரத்தக்‌ கொதிப்பில்‌ அதிக ஏற்றத்‌ தாழ்வு இருந்தது. மருத்துவ ரீதியாக எக்காரணத்தைக்‌ கொண்டும்‌ எனக்கு இரத்தக்‌ கொதிப்பில்‌ தொடர்ந்து ஏற்றத்‌ தாழ்வு இருக்கக்‌ கூடாது, அது என்னுடைய மாற்று சிறுநீரகத்தைக் கடுமையாகப் பாதிக்கும்‌. ஆகையால்‌ என்னுடைய மருத்துவர்களின்‌ அறிவுரைப்படி அவர்களின்‌ மேற்பார்வையில்‌ மூன்று நாட்கள்‌ மருத்துவமனையில்‌ கண்காணிப்பில்‌ இருக்க நேரிட்டது.

என்‌ உடல்நிலை ௧ருதி தயாரிப்பாளர்‌ கலாநிதி மாறன்‌ அவர்கள்‌ மீதமுள்ள படப்பிடிப்பை ஒத்திவைத்தார்‌. இதனால்‌ பல பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு, பல கோடி ரூபாய்‌ நஷ்டம்‌. இவை அனைத்துக்கும்‌ காரணம்‌ என்னுடைய உடல்‌ நிலை. இதை ஆண்டவன்‌ எனக்குக் கொடுத்த ஒரு எச்சரிக்கையாகத்தான்‌ பார்க்கிறேன்‌.

நான்‌ கட்சி‌ ஆரம்பித்த பிறகு ஊடகங்கள்‌, சமூக வலைத்தளங்கள்‌ மூலமாக மட்டும்‌ பிரசாரம்‌ செய்தால்‌ மக்கள்‌ மத்தியில்‌ நான்‌ நினைக்கும்‌ அரசியல்‌ எழுச்சியை உண்டாக்கித்‌ தேர்தலில்‌ பெரிய வெற்றியைப் பெற முடியாது. இந்த யதார்த்தத்தை அரசியல்‌ அனுபவம்‌ வாய்ந்த யாரும்‌ மறுக்கமாட்டார்கள்‌.

நான்‌ மக்களைச் சந்தித்து கூட்டங்களைக் கூட்டி, பிரசாரத்திற்குச் சென்று ஆயிரக்கணக்கான ஏன்‌ இலட்சக்கணக்கான மக்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்‌. 120 பேர்‌ கொண்ட குழுவிலேயே கொரோனா பாதிப்பு ஏற்பட்டு நான்‌ மூன்று நாட்கள்‌ மருத்துவமனையில்‌ மருத்துவர்களின்‌ கண்காணிப்பில்‌ இருக்க நேர்ந்தது. இப்போது இந்த கொரோனா உருமாறி புது வடிவம்‌ பெற்று இரண்டாவது அலையாக வந்து கொண்டிருக்கிறது.

மருந்துகளைச் சாப்பிடும்‌ நான்‌, இந்த கொரோனா காலத்தில்‌ மக்களைச் சந்தித்து, பிரசாரத்தின்‌ போது என்‌ உடல் நிலையில்‌ பாதிப்பு ஏற்பட்டால்‌ என்னை நம்பி என்கூட வந்து என்னுடன்‌ அரசியல்‌ பயணம்‌ மேற்கொண்டவர்கள்‌ பல சிக்கல்களையும்‌ சங்கடங்களையும்‌ எதிர்கொண்டு, மனரீதியாகவும்‌ பொருளாதார ரீதியாகவும்‌ பல துன்பங்களைச் சந்திக்க நேரிடும்‌.

என்‌ உயிர்‌ போனாலும்‌ பரவாயில்லை, நான்‌ கொடுத்த வாக்கை தவற மாட்டேன்‌, நான்‌ அரசியலுக்கு வருவேன்‌ என்று சொல்லி இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால்‌ நாலு பேர்‌ நாலுவிதமா என்னைப் பற்றிப் பேசுவார்கள்‌ என்பதற்காக என்னை நம்பி என்‌ கூட வருபவர்களை நான்‌ பலிகடா ஆக்க விரும்பவில்லை. ஆகையால்‌ நான்‌ கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. இதை அறிவிக்கும்‌ போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும்‌ தான்‌ தெரியும்‌.

இந்த முடிவு ரஜினி மக்கள்‌ மன்றத்தினருக்கும்‌, நான்‌ கட்‌சி ஆரம்பிப்பேன்‌ என்று எதிர்‌ பார்த்துக்‌ கொண்டிருக்கும்‌ ரசிகர்களுக்கும்‌, மக்களுக்கும்‌ ஏமாற்றத்தை அளிக்கும்‌, என்னை மன்னியுங்கள்‌.

தேர்தல்‌ அரசியலுக்கு வராமல்‌ மக்களுக்கு என்னால்‌ என்ன சேவை செய்யமுடியுமோ அதை நான்‌ செய்வேன்‌. நான்‌ உண்மையைப் பேச என்றுமே தயங்கியதில்லை.

உண்மையையும்‌, வெளிப்படைத் தன்மையையும்‌ விரும்பும்‌, என்‌ நலத்தில்‌ அக்கறையுள்ள, என்மேல்‌ அன்பு கொண்ட என்னை வாழவைக்கும்‌ தெய்வங்களான இரசிகர்களும்‌, தமிழக மக்களும்‌ என்னுடைய இந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும்‌ என்று அன்புடன்‌ கேட்டுக்கொள்கிறேன்.‌

Wed, 12/30/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை