வெலிக்கடையில் நடத்த திட்டமிட்ட சம்பவம் மஹர சிறைச்சாலையில் நடந்துள்ளது

- அமைச்சர் விமல் வீரவங்ச

வெலிக்கடையில் நடத்த திட்டமிட்டிருந்த சம்பவமே மஹர சிறைச்சாலையில் நடைபெற்றுள்ளது. இதற்கான வெலிக்கடை சிறைச்சாலையில் மனநோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரைகள் மூலம் ஒத்திகை இடம்பெற்றமைக்கான சான்றுகள் உள்ளதாக அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.

இந்த விடயத்தை பயன்படுத்தி தேசியப் பாதுகாப்பு வீழ்ச்சியடைந்துள்ளதாக எதிர்க்கட்சி கூறுவது முட்டாள்தனமாகுமெனவும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

தேசியப் பாதுகாப்புத் தொடர்பிலான பிரச்சினைக்கு முன்னுரிமையளித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை 69 இலட்சம் மக்கள் வாக்களித்து ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்தனர்.

அதேபோன்று மஹர சிறையில் இடம்பெற்ற சம்பவம் வெலிக்கடை சிறைச்சாலையில் கடந்த மாதம் 18ஆம் திகதிக்கு முன்னர் திட்டமிடப்பட்டதாகும்.

சமயங் என்ற பாதாளக் குழு தலைவரின் சதுரங்க என்பவரே வெலிக்கடை சிறைச்சாலைக்குள் இவ்வாறான சம்பவமொன்றை ஏற்படுத்த திட்டமிட்டிருந்தார். அதற்கான முன் ஒத்திகைகளை அவர்கள் செய்துள்ளனர். புலனாய்வுத்துறையினர் இந்தத் தகவல்களை உறுதிப்படுத்தியுள்ளனர். இவர்கள் ஆலோசனை பெற்றுக்கொண்டவர்கள் மற்றும் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டவர்களின் விபரங்களை திரட்டியுள்ளனர். சதுரங்க என்பவரும் மற்றுமொரு கைதியும் உதவிகளை வழங்கிய சிறையதிகாரி (ஜெலர்) ஒருவரும் பல இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கைதிகளை பூசாவுக்கு அனுப்பியுள்ளனர். ஜெயிலர் வேறு முகாமொன்றுக்கு மாற்றப்பட்டுள்ளார். அதனுடன், வெலிக்கடை சிறைச்சாலையில் நடைபெறவிருந்த இந்த சம்பவம் தடைப்பட்டது. இல்லாவிட்டால் இந்த துரதிஸ்டமான சம்பவம் வெலிக்கடையில்தான் இடம்பெற்றிருக்கும். முன்நடவடிக்கைகளை எடுத்ததால் அந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டது. வெலிக்கடையில்தான் ஒரு மாத்திரையை பரீட்சார்த்துப் பார்த்துள்ளனர். இரண்டு நாட்களில் இரண்டு நபர்களுக்கு இந்த மாத்திரைகளை கொடுத்துள்ளனர். மாத்திரையை பாவித்துள்ளவர்கள் தமது உடல்களை வெட்டிக்கொண்டுள்ளனர். இவை சாட்சியங்களாக உள்ளன.

வெலிக்கடை சம்பவத்தை தடுக்க முடிந்துள்ள போதிலும் ஏனைய சிறைச்சாலைகளில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும் என்பதை அவதானிக்க முடியாது போயுள்ளது. புகைப்படங்களை பார்த்தால் கைதிகள் கைதிகளுடன் மோதல்களை நடத்துகின்றனர்.

சாதாரணமான மனநிலை கைதிகள் இடையில் தாக்குதல்களை நடத்திக்கொள்வார்களா?. மனநோயாளிக்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகளை இவர்கள் சில சந்தர்ப்பங்களில் பயன்படுத்துகின்றனர். நான் சிறையில் இருந்த தருணத்தில் இவ்வாறான சம்பங்களை நேரடியாக அவதானித்திருந்தேன். மஹர சிறைச்சாலையில் மிகவும் மோசமான மனநோயாளிகளுக்கு கொடுப்பதற்கு கொண்டுவரப்பட்டிருந்த வீரியமான மாத்திரைகளுக்கு என்ன நடந்ததென ஆராய்ந்து பார்க்க வேண்டும்?

சம்ஷ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Fri, 12/04/2020 - 10:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை