ஊழல் என்பது அபிவிருத்திக்கு மிகப் பெரிய தடையாகும்

இல்லாதொழிக்க நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

ஊழல் கலாசாரத்திலிருந்து எமது நாட்டை விடுவித்து எமது அடுத்த தலைமுறையினருக்கு ஒரு சிறந்த தேசத்தை பரிசளிப்பதற்கு ஒன்றுபடுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

2020 டிசம்பர் 9 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,...

ஊழல் என்பது அபிவிருத்திக்கு மிகப்பெரிய தடையாகும்.

ஊழலானது நிறுவனங்கள் அவற்றின் அதிகபட்ச திறனை அடைவதைத் தடுத்து இறுதியில் ஒரு நாட்டின் வளர்ச்சியையே தடுத்துவிடுகிறது. கண்காணிப்பு பொறிமுறைகளில் உள்ள குறைபாடுகளின் காரணமாகத் தேவையற்ற  சுரண்டல்களுக்கு இடமளிக்கும் நெருக்கடியான காலகட்டங்களில் இதனை மிகத் தெளிவாக நாம் காணலாம்.

ஒரு நாட்டின் குடிமக்கள் இந்த வெறுக்கத்தக்க நடைமுறையை எதிர்த்துப் போராடும் உணர்வையும் மனவிருப்பத்தையும் கொண்டிருக்கும்போது அந்த நாடு ஊழலை சிறப்பாக எதிர்த்துப் போராட முடியும்.

பிரஜைகள் ஊழலை சகித்துக்கொள்ளாதிருப்பதானது அதனைத் தடுப்பதற்கான சிறந்த பரிகார நடவடிக்கையாகும்.

எனவே தான் எனது “சுபீடசத்தின் நோக்கு“ கொள்கைப் பிரகடனத்தில் ஊழலை எதிர்த்துப் போராடுவதில் பொதுமக்களை வலுவூட்டுவதற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

ஊழலையும் வீண்விரயத்தையும் ஒழிப்பதனை எனது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாக நான் கருதுகிறேன்.

இலங்கை மக்கள் பெரும்பான்மை பலத்துடன் எனது வெற்றியை ஆதரித்தபோது ஊழல் இல்லாத ஒரு வினைத்திறனான நாட்டிற்கான தங்களது விருப்பத்தையும் வலுவான ஆதரவையும் வெளிப்படுத்தினர்.

அரசாங்க சேவைகளைத் திறம்படப் பெறுவதற்கான உங்களது உரிமைகள் பற்றி அதிகம் அறிந்திருக்கவும், எந்தவடிவிலான இலஞ்ச கோரிக்கைகளுக்கும் உட்படுவதை எதிர்க்கவும், அரசாங்கத்தின் நிர்வாக பொறிமுறைகளில் அதிக பங்கேற்பு மற்றும் செயல்திறன் மிக்க பாத்திரத்தை வகிப்பதற்கும் எமது நாட்டின் பிரஜைகளை நான் அழைக்கின்றேன்.

உங்கள் மீதான அரசாங்கத்தின் கடப்பாடுகள் குறித்து அதிக விழிப்புடன் இருக்கும்படியும், இலஞ்சம் ஊழல் பற்றிய எந்தவொரு சம்பவத்தையும் சட்ட அமுலாக்க அல்லது விசாரணை செய்யும் அதிகாரத் தரப்பிற்கு உடனடியாக அறிவிக்கும்படியும், அதன் மூலமாக குடிமக்கள் என்ற வகையிலான உங்கள் கடமையைச் செய்யுமாறும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

ஊழல் தடுப்புப் பொறிமுறையில் ஒரு பிரக்ஞைபூர்வமான பங்கைக் குடிமக்கள் கொண்டிருக்கும்போதே, எமது நாட்டிலிருந்து இந்த அச்சுறுத்தலை ஒழிப்பது எளிதாக அமையும்.

ஊழல் கலாசாரத்திலிருந்து எமது நாட்டை விடுவித்து எங்கள் அடுத்த தலைமுறையினருக்கு ஒரு சிறந்த தேசத்தை பரிசளிப்பதற்கு நாம் ஒன்றுபடுவோம் என்றும் அவ் கூறினார்.

Thu, 12/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை