சுகாதார அமைச்சு தீவிர கவனம் என்கிறார் அமைச்சர் பவித்ரா

கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் வைரஸ் தொற்று தடுப்புக்கான புதிய சிகிச்சை நிலையங்களை ஸ்தாபிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கவனம் செலுத்தி உள்ளார்.

அதற்கான நிதி உதவிகளை உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் மூலம் பெற்றுக் கொள்வது தொடர்பிலும் நேற்றைய தினம் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் அமைச்சில் நேற்று இடம்பெற்ற கொரோனா வைரஸ் செயற்பாடு தொடர்பான மீளாய்வு குழுவின் கூட்டத்தில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்;

தற்போது நாட்டில் தினமும் புதிதாக 500 க்கும் 600 க்கும் இடைப்பட்ட வைரஸ் தொற்று எண்ணிக்கையாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்றார்கள்.

அந்த நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் புதிதாக சிகிச்சை நிலையங்களை ஸ்தாபிப்பது தொடர்பிலும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று அதிக எண்ணிக்கையானவர்களுக்கு சிகிச்சை வழங்கும் வகையில் வசதிகள் கொண்ட ஆஸ்பத்திரிகளை உடனடியாக சுகாதார அமைச்சின் கீழ் சுவீகரித்து அந்த ஆஸ்பத்திரிகளை கொரோனா வைரஸ் சிகிச்சை மத்திய நிலையங்களாக மாற்றுவதற்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கான நிதியை சுகாதார அமைச்சின் மூலம் பெற்றுக்கொள்ளவும் தேவையான மேலதிக நிதியை உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கிகள் மூலம் பெற்றுக்கொள்வது தொடர்பிலும் மேற்படி மீளாய்வு கூட்டத்தில் நேற்று கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பரிசோதனைகளின்படி கொழும்பு, கம்பஹா, களுத்துறை உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கியதாக தினமும் 14000 பிசி ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ள படுவதுடன் 3000 அன்டிஜன் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதேவேளை ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் டாக்டர்கள் தாதிகள் பொது சுகாதார பரிசோதகர்கள் சுகாதாரத்துறை உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்களின் பாதுகாப்பு தொடர்பிலும் உரிய வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதேவேளை அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களையும் போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளையும் பெற்றுக் கொடுப்பதற்கு அமைச்சின் செயலாளர் டாக்டர் சஞ்சீவ முனசிங்கவிடம் அமைச்சர் பணிப்புரை வழங்கியுள்ளார்.

அதேவேளை நாட்டில் தினமும் சுமார் 600 புதிய வைரஸ் தொற்று நோயாளர்கள் இனங்காணப்பட்டு வரும் நிலையில் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி குணமடையும் நோயாளிகளின் எண்ணிக்கையும் தினமும் 500 ஆக அதிகரித்து வருவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நேற்றைய இந்த மீளாய்வுக் குழுக் கூட்டத்தில் அமைச்சின் மேலதிக செயலாளர் கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 12/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை