விமான நிலையங்கள் திறக்கப்படும் நிலையில் விமான நிலையங்கள், துறைமுகங்கள் ஊடாகவும் நாட்டுக்குள் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
விமான நிலையம் திறக்கப்பட்ட பின் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் தொடர்பில் சுகாதார அமைச்சு வழிகாட்டி நெறி ஒன்றை தயாரித்துள்ள நிலையில் அதனை விமான நிலைய நிர்வாகத்துக்கு வழங்கியுள்ளது.
சுகாதார அமைச்சின் பொதுச் சுகாதாரம் தொடர்பான பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஹேமந்த ஹேரத் இது தொடர்பில் தெரிவிக்கையில்;
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டாலும் அது விமான நிலையம் ஊடாகவும் துறைமுகங்கள் ஊடாகவும் நாட்டுக்குள் வருவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளன.
அதனை கட்டுப்படுத்தும் வகையிலேயே சுகாதார அமைச்சு அதற்கான நெறிமுறைகளை உள்ளடக்கிய வழிகாட்டுதல்களை தயாரித்து விமானநிலைய நிர்வாகத்துக்கு வழங்கியுள்ளது.அதேவேளை, விமான நிலையங்களின் ஊடாக நாட்டுக்குள் பிரவேசிக்கும் நபர்களின் மூலம் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுப்பதற்கு தேவையான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.
வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்குள் வைரஸ் தொற்று ஏற்படுவது தொடர்பில் எமக்கு மிகுந்த அனுபவம் உள்ளது,
இந்த அனுபவங்களை கவனத்தில் கொண்டு உரிய வழிமுறைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் எதிர்காலத்தில் விமான நிலையங்கள் மூலம் பெருமளவிலானோர்
நாட்டுக்குள் பிரவேசிக்கும் போது அதற்குப் பொருத்தமான வழிகாட்டல்களும் ஆலோசனைகளும் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (ஸ)
லோரன்ஸ் செல்வநாயகம்
from tkn