20 நாட்களேயான குழந்தையின் இறப்பு; கொரோனா அபாயம் குறித்துஇலங்கை பாடம் கற்க வேண்டும்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்து

பிறந்து 20 நாட்களேயான குழந்தையின் உயிரிழப்பிலிருந்து இலங்கை பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். பெற்றோர் தொற்றுக்குள்ளாகியிருக்காத நிலையில் குழந்தைக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பதை கொரோனா மரணங்கள் தொடர்பான மீளாய்வு குழு ஆராய்ந்து உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அலுத்கே இதனை வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், செவ்வாய்கிழமை உயிரிழந்த குழந்தைக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ள போதிலும், குறித்த குழந்தையின் பெற்றோருக்கு தொற்று ஏற்படவில்லை. அவ்வாறெனில் குழந்தைக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது கண்டறியப்பட வேண்டும்.

தற்போது ஒரு குழந்தை மாத்திரமே உயிரிழந்துள்ள போதிலும், இதிலிருந்து நாம் அனைவரும் பாடமொன்றைக் கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறான காரணிகளை அடிப்படையாகக் கொண்டே துரிதமாக கொரோனா மரணங்கள் குறித்த மீளாய்வு குழுவை நியமிக்குமாறு வலியுறுத்தினோம். குறித்த மரணம் தொடர்பில் மீளாய்வு செய்வது அந்த குழுவின் பொறுப்பாகும்.

குழந்தை மிகவும் தாமதமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமையே மரணத்திற்கான காரணம் என்று வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஆரம்பத்தில் தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும், முதியவர்களும் கொவிட் தொற்றால் உயிரிழந்தனர். ஆனால் தற்போது இளைஞர்களும் உயிரிழக்கின்றனர். எனவே இலங்கையில் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படாமல் தடுப்பதற்கு எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை சுகாதார அமைச்சு நாட்டுக்கு தெரியப்படுத்தும் என எதிர்பார்க்கின்றோம்.

நாளொன்று குணமடைபவர்களின் எண்ணிக்கைக்கு சமமானளவு தொற்றாளர்கள் இனங்காணப்படுவார்களாயின் நாம் சவாலுக்கு முகங்கொடுக்க நேரிடும். இதுவரையில் கொழும்பு மாநகர சபையை அண்மித்த பகுதிகளில் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். ஆனால் தற்போது அதற்கு வெளியிலும் சில பகுதிகளில் கிளை கொத்தணிகள் உருவாகியுள்ளன. எனவே இவ்வாறான பிரதேசங்கள் தொடர்பில் சரியான தீர்மானத்தை எடுத்தால் மாத்திரமே நாடு என்ற ரீதியில் எம்மால் முன்னோக்கிச் செல்ல முடியும்.

பி.சி.ஆர். பரிசோதனைகளின் அளவை அதிகரிப்பதற்கு இதற்கு சிறந்த தீர்மானமாகும். அத்தோடு கேகாலை, களுத்துறை உள்ளிட்ட மாவட்டங்களிலும் அல்லது கொழும்பு தேசிய வைத்தியசாலையிலாவது ஆய்வுகூடமொன்று அமைக்கப்பட வேண்டும். அத்தோடு அபாயமுடைய பிரதேசங்களை அடையாளப்படுத்தி , அந்த பகுதிகளில் நாளாந்தம் இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் குறித்த பிரதேசம் தொடர்பில் சுகாதார அமைச்சின் நிலைப்பாடு என்பவற்றையும் உடனுக்குடன் தெரியப்படுத்த வேண்டும் என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 12/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை