உட்கட்டமைப்பு வசதிகளுடன் மீன்பிடித் துறைமுகங்கள்

பாராளுமன்றத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

பருத்தித்துறை, குருநகர், பேசாலை, வாழைச்சேனை உட்பட நாட்டின் அனைத்து பாகங்களிலும் சகல வசதிகளும் கொண்ட மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்க இருப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். கடற்றொழிலாளர்களுக்கு காப்புறுதி மற்றும் ஓய்வூதியத் திட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.

கடற்றொழில் அமைச்சு தொடர்பான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்,

கொவிட் 19 காரணமாக கடற்றொழில்சார் செயற்பாடுகள் சந்தித்துள்ள பின்னடைவுகளில் இருந்து மீள்வதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறிப்பாக கந்தர, வெல்லமன்கர, பலப்பிட்டிய, ஹிக்கடுவ, அம்பலங்கொட, காலி, மிரிஸ்ஸ, நிலாவெளி, ஹம்பாந்தோட்டை, சுதுவெல்ல, தொடந்தூவ, மயிலிட்டி, வாழைச்சேனை போன்ற இடங்களில் சகல உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய மீன்பிடித் துறைமுகங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பருத்தித்துறை, குருநகர்,பேசாலை மீன்பிடித் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் ஒலுவில் துறைமுகத்தை மீன்பிடித் துறைமுகமாக மாற்றியமைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆழ்கடல் கடற்றொழிலை பரவலாக மேற்கொள்ளத்தக்க வகையில் பயிற்சிகளை வழங்கி அதற்குரிய படகுகள் கருவிகள் மற்றும் உபகரணங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுக்கவுள்ளோம்.

கடற்றொழிலாளர்களுக்கான காப்புறுதி முறைமையொன்றை அறிமுகம் செய்தல், கடல்சார் பல்கலைக்கழகத்தைப் பயன்படுத்தி இளைஞர் - யுவதிகளுக்கென கடற்றொழில் தொடர்பிலான தொழில்நுட்ப மற்றும் முகாமைத்துவப் பயிற்சி நெறிகளை செயற்படுத்தல், கடற்றொழில் சார்ந்த மகளிர் சங்கங்களை வலுப்படுத்தல், செயற்பாடுகளை இழந்துள்ள கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களை வலுப்படுத்தல்,'கடற்றொழில் ஊக்குவிப்பு' (தீவர திரிய) கடன் திட்டத்திற்கு பங்களிப்பாற்றுவதன் மூலமாக கடற்றொழில் சார்ந்த உதவித் திட்டங்கள்,கடற்றொழிலாளர்களுக்கான ஓய்வூதியங்களை வழங்கும் வகையிலான முறைமையை செயற்படுத்தல் போன்ற செயற்பாடுகளையும் முன்னெடுக்கவுள்ளோம்.

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய செயற்பாடுகள் காரணமாக எமது கடற்றொழிலாளர்கள் பல்வேறு பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளதுடன் எமது கடல் வளங்களும் பாதிப்படைந்து வருகின்றன. எனவே இப் பிரச்சினையை தொடர்பான கலந்துரையாடல்களை தொடர்ந்தும் முன்னெடுத்து நிரந்தர தீர்வொன்றை பெற்றுக் கொள்ளவதற்கும் எதிர்பார்த்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.

ஷம்ஸ் பாஹிம், நிசாந்தன் சுப்பிரமணியம்

 

 

Sat, 11/28/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை