பாடசாலைகள் மீண்டும் நேற்று ஆரம்பமானது
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை தவிர்ந்த ஏனைய பகுதிகளிலுள்ள பாடசாலைகள் நேற்று மீள திறக்கப்பட்டுள்ளன. ஆனால் சில பகுதிகளில் மாணவர் வருகையில் பெரு வீழ்ச்சி ஏற்படவில்லை.
நேற்று திறக்கப்பட்ட பாடசாலைகளில் தரம் 6 தொடக்கம் 13 வரையிலான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கப்பில பெரேரா தெரிவித்தார்.
சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தப்படுவதற்கான நடைமுறை சிக்கல்கள் காரணமாக, தரம் ஒன்று முதல் தரம் 5 வரையான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படவில்லை.
பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுகின்ற நிலையில், எவ்வாறு செயற்பட வேண்டும் என வௌியிடப்பட்ட வழிகாட்டல்கள் இம்முறையும் பின்பற்றப்பட வேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கப்பில பெரேரா தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர ஏனைய பகுதிகளில் திறக்கப்பட்டுள்ள பாடசாலைகளின் மாணவர்களுக்காக பொலிஸார் விசேட அறிவுறுத்தல்களை விடுத்துள்ளனர்.
மலையகத்திலுள்ள பாடசாலைகளிலும் கல்விச் செயற்பாடுகள் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இடம்பெற்றது.
மாணவர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி வழமைபோல் பாடசாலைகளுக்கு வந்திருந்தனர்,
மாணவர்கள் பாடசாலை வளாகத்துக்குள் வந்ததும் அவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, கைகளை கழுவிய பின்னர் வகுப்பறைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
சுகாதார இடைவெளியைப் பின்பற்றும் விதத்தில் வகுப்பறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
ஹற்றன் கல்வி வலயத்திலுள்ள, ஹற்றன் வெளிஓயா மலைமகள் தமிழ் வித்தியாலயம், ஆக்ரோயா தமிழ் வித்தியாலயம் ஆகிய இரண்டு பாடசாலைகளும் நேற்று திறக்கப்படவில்லை.
இப்பகுதிகளில் நேற்று முன்தினம் கொரோனா தொற்றாளர்கள் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
from tkn