தமிழர் வாழ்வில் நிரந்தர ஒளியேற்ற உழைக்கிறோம்

தீபத்திருநாள் ஒளிமயமாகட்டுமென டக்ளஸ் வாழ்த்து

ஒளிமயமான எதிர்காலம் ஒவ்வொருவருக்கும் வாய்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்களை உணர்த்தும் வெளிப்பாடாகவே தீபங்கள் ஏற்றி தீமைகள் அகன்றதென மகிழ்ந்து கொண்டாடும் தீபத்திருநாளில் அனைவரினதும் எண்ணங்களும் ஈடேற வேண்டுமென வாழ்த்துகின்றேன் என கடற்றொழில் அமைச்சரும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள தீபத்திருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது:

தமிழ் மக்கள் தாம் எதிர்கொண்டுள்ள அனைத்து வகைப் பிரச்சினைகளுக்கும் கௌரவமானதும், நியாயமானதுமான தீர்வுகள் கிடைக்க வேண்டும் என விரும்புகிறார்கள்.

அதனை அடைந்து கொள்ள தேசிய நல்லிணக்கம் எனும் ஒளிவிளக்கை ஏந்தி பயணிக்க தமிழ் மக்கள் முன்வர வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.

இருளை நீக்க வீடுகளில் தீபங்களை ஏற்றுவதைப் போல நம்மைச் சூழவுள்ள பின்னடைவுகளிலிருந்தும், கல்வி மற்றும் பொருளாதார சரிவுகளிலிருந்தும் நாம் முன்னோக்கி பயணிக்க உறுதிகொள்ள வேண்டும்.

வளமான தேசமும், நம்பிக்கையான எதிர்காலமும் உறுதிப்படுத்தப் படாதவரை தமிழ் மக்கள் எதிர் கொண்ட பிரச்சினைகள் தீராபிரச்சினைகளாகவே இருக்கப்போகின்றது.

அத்தகைய நிலையே தொடர வேண்டும் என தமது சுயநலன்களை முன்னிருத்தும் அரசியல் வாதிகள் விரும்புகின்றனர்.

ஆனால் எமது ஓய்வின்றிய உழைப்பும் கடினமான முயற்சிகளும் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கும், அன்றாடப் பிரச்சினைகளுக்கும், அபிவிருத்தி சார்ந்த பிரச்சினைகளுக்கும் தேசிய நல்லிணக்கத்தின் வழியில் நடைமுறை சாத்தியமான அணுகுமுறை ஊடாக பொறருத்தமான தீர்வுகளை பொற்றுக்கொடுப்பதே ஆகும்.

பண்டிகைக் காலங்களில் தமிழ் மக்களின் வாழ்வில் ஒளிவீச வேண்டும் என அவரவர் அறிக்கைகள் விடுவதால் மட்டும் பிரச்சினைகள் தீர்ந்து விடாது. மாறாக அத்தீர்வுகளை அடைந்து கொள்வதற்கான விருப்பமும், அர்ப்பணிப்பும், உழைப்பும் இருக்க வேண்டும்.

எமது உழைப்பும், அர்ப்பணிப்பும் தமிழ் மக்களைச் சூழ்ந்துள்ள இருளை விலக்கி நிரந்தர ஒளியை கொடுக்கும் என்று நம்புவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Sat, 11/14/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை