புயலால் பாதிக்கப்பட்டுள்ள மீனவருக்கு உதவி வேண்டும்

கடற்றொழில் இணையம் வேண்டுகோள்

நிவர் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

வடமாகாண மீனவர்கள் 83 ஆம் ஆண்டு கலவரத்தின் பின்னர் பலதரப்பட்ட வகையில் பல பொருளாதார பின்னடைவை சந்தித்துக் கொண்டு வருகிறார்கள். அந்த வகையிலே இந்திய இழுவை படகுளின் அத்துமீறிய வருகை, உள்ளூர் சட்டவிரோத மீன்பிடிகளாலும் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றார்கள்.

மீனவ மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்திற்கு மிகவும் சிரமப்பட்டு கொண்டிருக்கின்ற வேளையில் போரின் வடுக்களில் இருந்து விடுபடாத மக்களை அனர்த்தங்களும் விடுவதில்லை.

ஜூலைக் கலவரத்தின் பின்னர் நிஷா புயல் பேரழிவு, சுனாமி பேரழிவு அதனோடு பல ஆயிரக்கணக்கான உயிர்களை காவுகொண்ட நிலை அதன் பின்னர் வந்த சூறாவளிகளினால் பாதிக்கப்பட்டு இப்பொழுது புயல் அச்சத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இந்த அழிவுகளை சந்தித்த மக்கள் தமது அன்றாட வருமானத்திற்கு அவர்களுடைய பசியை போக்குவரத்திற்கு மிகவும் கஷ்டப்படுகிறார்கள். எனவே இந்த நிலையில் நிகார் புயல் வந்து பெரிதும் பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ள காரணத்தினால் மீனவ மக்கள் கடலுக்கு செல்லாது தங்கள் தொழில்களை விட்டு வீடுகளில் முடங்கியுள்ளார்கள்.

இவர்களுடைய பசியினை நாங்கள் உடனடியாக போக்க வேண்டிய சூழலில் இருக்கின்றோம். இதற்கு உரிய தரப்பினர் குறிப்பாக மாவட்ட செயலகம் பிரதேச செயலகங்கள் முக்கியமாக கடற்றொழில் அமைச்சு இந்த விடயத்தை கருத்தில் எடுத்து இதற்கு உரிய நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

பருத்தித்துறை விசேட நிருபர்

Thu, 11/26/2020 - 12:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை