திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் கொரோனா நோய் இதுவரை காலமும் எவருக்கும் இனங்காணப்படாத நிலையில், பொதுமக்களை கொரோனா நோயிலிருந்து மேலும் பாதுகாக்கும் வகையில், பல்வேறு விழிப்புணர்வு, செயற்றிட்டங்கள் கிண்ணியா பிரதேச செயலகத்தினூடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில், கிராமப்புற மக்களுக்கு கொரோனா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவிலும் கொரோனா தடுப்பு செயலணிகளை உருவாக்கி கிராமப்புற மக்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது
கிண்ணியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட சமாவச்சதீவு கிராம உத்தியோகத்தர் பிரிவில் இன்று (20) கொரோனா விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது
நெடுந்தீவு கிராம உத்தியோகத்தர் காரியாலயத்தில் ஆரம்பித்து சல்லிக்களப்பு ஊடான பிரதான வீதியினூடாக ஊர்வலமாகச் சென்று மீண்டும் அதே இடத்தை வந்தடைந்தனர்
ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் "இருமல் தும்மலா துணி கொண்டு மூடு, வந்தால் உடனே மருத்துவரை நாடு", "நெடும் பயணம் நாம் தவிர்ப்போம், கொரோனாவிற்கு விடை கொடுப்போம்", "சமூக இடைவெளி பேணுவோம், கொரோனா அற்ற சமூகமாய் மாறுவோம்", "நம்மை நாம் பாதுகாப்பதன் மூலம் மற்றவருக்கு உதவுவோம்" போன்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான முகக்கவசங்கள் ஊர்வலத்தின்போது வழங்கப்பட்டன.
ஊர்வலத்தின்போது மக்களுக்கு கொரோனா நோய் தொடர்பாகவும் அத்தோடு மழைக்காலம் என்பதால் டெங்கு நோய் தொடர்பாகவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
கிண்ணியா பிரதேச செயலாளர் முஹம்மது கனி தலைமையில் ஊர்வலம் நடைபெற்றது இவ்வூர்வலத்தில் கிராம உத்தியோகத்தர் எப்.எம். ஜவாஹிர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ. பயாஸ் அலி , பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.டீ. பைரோஸ் , பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எச். ஜிப்ரி, பட்டதாரி பயிலுனர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர் ஆரிப் சமுர்த்தி பயனாளிகள், விளையாட்டுக்கழக அங்கத்தவர்கள் , இளைஞர் கழக உறுப்பினர்கள் மற்றும் கொரோனா தடுப்பு செயலணி உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டு ஊர்வலத்தை முன்னெடுத்தனர்
(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம்)
from tkn