தமிழகத்தில் சிக்கியுள்ளவர்களை அழைத்துவர டக்ளஸ் ஏற்பாடு

கொவிட் 19 காரணமாக நாடு திரும்ப முடியாமல் தமிழகத்தில் சிக்கியிருப்போரை அழைத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார். அத்துடன் நாடு திரும்ப விரும்புகின்றவர்கள் தொடர்பான விபரங்களை அறியத் தருமாறும் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பல்வேறு தேவைகள் நிமித்தம், இந்தியாவிற்கு – குறிப்பாத தமிழகத்திற்கு சென்றிருந்த நிலையில் கொவிட் 19 காரணமாக ஏற்பட்ட தொற்று பரவலினால் ஏற்பட்ட போக்குவரத்து தடங்கல் காரணமாக சுமார் 1,500 பேர் வரையில் தமிழகத்தில் சிக்கியுள்ளதாக கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனையடுத்தே அமைச்சரினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

குறுகிய காலத் திட்டமிடலுடன் சென்றவர்கள் திட்டமிட்டவாறு நாடு திரும்ப முடியாமையினால், கடந்த பல மாதங்களாக எதிர்கொள்ளக் கூடிய இன்னல்களை தன்னால் உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருப்பதாக அந்த அறிவிப்பில் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்த இன்னல்களிலிருந்து பாதிக்கப்பட்டிருக்கின்றவர்களை மீட்க வேண்டியது தன்னுடைய தார்மீகக் கடமையெனவும் தெரிவித்தார். இது தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடி பாதுகாப்பான முறையில் அவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டுக்கு வருவதற்கு ஆவலாக இருப்போர் 0094760225167, 0094769122831, 00919003067621 ஆகிய இலக்கங்களின் ஒன்றுக்கு தொலைபேசி ஊடாகவோ அல்லது வட்ஸ்அப் செயலி ஊடாகவோ தொடர்பு கொண்டு தங்களில் விபரங்களை வழங்கினால் அழைத்து வருவதற்கான திட்டமிடல்களை மேற்கொள்வதற்கு இலகுவாக இருக்கும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

Tue, 11/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை