பிள்ளையார் சிலை சேதம்; ஒருவர் கைது

மட்டக்களப்பு, வாழைச்சேனையில் உள்ள ஸ்ரீ கைலாயப் பிள்ளையார் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த வழிப் பிள்ளையார் சிலை சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவரை இன்று (06) கைது செய்துள்ளதாக, வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜி.எஸ். ஜெயசுந்தரவின் ஆலோசனையின் பேரில் அரச புலனாய்வு உத்தியோகஸ்தர்கள் மேற்கொண்ட விசாரணையின்போது, இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபர், ஶ்ரீ கைலாயப் பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள பிரதேசத்தில் வசித்து வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என, பொலிஸார் தெரிவித்தனர்.

தனக்கு நீண்ட காலமாகியும் அரச உத்தியோகம் கிடைக்கவில்லை எனவும், திருமண விடயமும் சரிவராத காரணத்தினால் வழிப் பிள்ளையாரை கட்டிப்பிடித்து மன வேதனையில் அழுததாகவும், அதனால் ஏற்பட்ட உராய்வு மற்றும் அசைவு காரணமாக பிள்ளையாரின் உடற்பாகங்களில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக, வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

70 வருட கால பழமை வாய்ந்த இரண்டரை அடி உயரமுள்ள குறித்த பிள்ளையார் சிலை நேற்று (05) சேதமாக்கப்பட்டிருந்ததோடு, இச்சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு தடயவியல் பொலிஸார் சம்பவ இடத்திற்கு நேற்று மாலை சென்று விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

(பாசிக்குடா நிருபர் - உருத்திரன் அனுருத்தன்)

Fri, 11/06/2020 - 18:23


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை