- சபாநாயகர் மஹிந்த யாபா அறிவிப்பு
அரச சேவை ஆணைக்குழுவின் நியமனங்கள் தொடர்பான அதிகாரங்கள் ஜனாதிபதிக்கே உள்ளன. அதனை பற்றி சபையில் கதைக்க முடியாதென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். பாராளுமன்றம் நேற்று முற்பகல் சபாநாயகர் தலைமையில் கூடிய போது, அரச சேவை ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்கள் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர் மனுஷ நாணயக்காரவினால் எழுப்பப்பட்ட ஒழுங்குப் பிரச்சினைக்கு பதிலளிக்கும் போதே சபாநாயகர் இவ்வாறு தெரிவித்தார்.
மனுஷ நாணயக்கார எம்.பி ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்து தெரிவிக்கையில்,
ஆணைக்குழுவிற்கான நியமனங்கள் தொடர்பான பெயர் விபரங்கள் பாராளுமன்றத்தினால் அனுப்பப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன என்றார்.
இதன்போது கருத்து தெரிவித்த சபாநாயகர்,..
அந்த ஆணைக்குழு தொடர்பாக சபையில் பேச முடியாது என்றார்.
இதனை தொடர்ந்து மீண்டும் ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்து தொடர்ந்தும் தெரிவித்த மனுஷ நாணயக்கார எம்.பி,
அந்தப் பெயர்களில் நாட்டில் வியாபாரத்துடன் தொடர்புடைய பரிசோதனை உபகரணங்களை கொண்டு வருவதற்கான மனுக்கோரலை மேற்கொண்டுள்ள நிறுவனமொன்றின் உரிமையாளர் ஒருவரின் பெயர் உள்ளது.
இவ்வாறானவர்களை அரச சேவை ஆணைக்குழுவுக்கு நியமிக்கும் போது அரச அதிகாரிகளுக்கு ஏதேனும் அழுத்தங்கள் ஏற்படாதென்று எங்களுக்கு கூற முடியாதென்றார்.
இதற்கு மீண்டும் பதிலளித்த சபாயாகர், இது சபையில் கதைக்க வேண்டிய விடயமல்ல. தயவு செய்து அதனை நிறுத்துங்கள் என்றார்.
இதனை தொடர்ந்து மீண்டும் தனது கருத்தை தெரிவித்த மனுஷ நாயக்கார எம்.பி, அரச சேவை ஆணைக்குழு தொடர்பாக எப்படி இந்த பாராளுமன்றத்தில் கேட்க முடியாதென்று கூற முடியும் என்றார்.
இதற்கு பதிலளித்த சபாநாயகர், அது பற்றி பேசும் அதிகாரம் உங்களுக்கில்லை. அதனை நியமிக்கும் முழுமையான அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது என்றார்.
ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்
from tkn