ஜெனீவா தீர்மானத்திலிருந்து விரைவாக வெளியேற நடவடிக்கை

EU க்கு அறிவிக்கப்படும் என்கிறார் வாசுதேவ

எமக்குள்ள மக்கள் ஆணையுடன் ஜெனீவா தீர்மானத்திலிருந்து வெளியேற நடவடிக்கை எடுப்போம் என்பதை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோமென அமைச்சர் வாசுதேவ நாணயகார தெரிவித்தார்

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை, 2021 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில் , ஐரோப்பிய ஒன்றியம் எமக்கு அச்சுறுதல் விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. எமது இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டாமென அவர்கள் கூறுகின்றனர்.

 அவர்களா எமக்கான வெளிநாட்டு கையிருப்பை தருகின்றனர். இதே விடயத்தை சர்வதேச நாணய நிதியம் எப்போதுமே கூறிக்கொண்டிருந்தது. நாட்டில் இறக்குமதியை அளவுக்கதிகமாக இடமளித்து எமக்கு தேவையானவற்றை இறக்குமதி செய்யக்கூறியும் அதற்காக தேவையான கடன்களை தாம் தருவதாக கூறினர். இதுதான் கடந்த ஆட்சியில் இடம்பெற்றது, இதனால் தான் ரூபாவின் பெறுமதி மோசமான விதத்தில் வீழ்ச்சி கண்டது. இதனால் வட்டி வீதம் அதிகரித்தது. இதனையெல்லாம் குறைக்க வேண்டும் என்றும் ரூபாவின் பெறுமதியை அதிகரிக்க வேண்டும் என்ற காரணத்தினால் தான் நாம் இறக்குமதியை கட்டுப்படுத்தியுள்ளோம்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் கேள்விகளுக்கு எமது மக்கள் கடந்த தேர்தலில் பதில் கூறியுள்ளனர், மக்கள் ஆணையுடன் நாம் இதற்கான பதிலை கூறியுள்ளோம். இதே மக்கள் ஆணையுடன் தான் அமெரிக்கா கொண்டுவந்த ஜெனீவா தீர்மானத்திலிருந்து வெளியேறினோம். எமக்கு கிடைத்த மக்கள் ஆணையை கொண்டே நாம் அவ்வாறான தீர்மானம் எடுத்தோம். ஆகவே எமக்குள்ள ஆணையின் பிரகாரம் இந்த தீர்மானத்திலிருந்து வெளியேறவும், இந்த நாட்டின் நல்லிணக்கத்தையும், மனித உரிமைகளையும், இந்த நாட்டின் நியாயத்தை கடைப்பிடிக்கவும் நடவடிக்கை எடுப்போம் என்பதை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.

நாம் ஐரோப்பிய நாடுகளுடன் வர்த்தக உறவை வைத்துக்கொள்வோம்,ஐரோப்பிய நாடுகளுடன் வர்த்தக உறவு வேண்டும் என்ற கோரிக்கையை நாம் நிராகரிக்கவில்லை, ஆனால் இன்றுள்ள நெருக்கடியான நிலையில் 20 பில்லியன் ரூபாவிற்கு அதிகமான இறக்குமதிகளை செய்ய முடியாது என நாம் கூறுவதில் என்ன தவறுள்ளது. உலக வர்த்தக உடன்படிக்கையில் ஒரு நாடு முன்னெடுக்க வேண்டிய தீர்மானங்கள் என்னவென்பது கூறப்பட்டுள்ளது. அதற்கமைய நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். எமது தொழிற்சாலைகளுக்கான இயந்திரங்கள், மூலப்பொருட்கள் ஐரோப்பாவில் இருந்து பெற்றுகொள்வோம் என கூறியுள்ளோம். அவசியமான விடயங்களில் நாம் ஐரோப்பாவுடன் இணைந்து செயற்படுவோம் என கூறியுள்ளோம். அதனைவிட வேறு எதனை எம்மிடம் எதிர்பார்க்கின்றனர்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

Sat, 11/21/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை