சுப்பர் ஓவரில் பாகிஸ்தானை வீழ்த்தியது சிம்பாப்வே அணி

பாகிஸ்தான் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான பரபரப்பான ஒருநாள் போட்டியில், சிம்பாப்வே அணி சுப்பர் ஓவரில் வெற்றிபெற்றது.

ராவல்பிண்டி மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 278 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சீன் வில்லியம்ஸ் ஆட்டமிழக்காது 118 ஓட்டங்களையும், பிரென்டன் டெய்லர் 56 ஓட்டங்களையும், சிகாண்டர் ரஸா 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில், மொஹமட் ஹஸ்னெய்ன் 5 விக்கெட்டுகளையும், வஹாப் ரியாஸ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 279 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 278 ஓட்டங்களை பெற்றது. ஓட்ட இலக்கு சமநிலைப்பெற்றதால் வெற்றியை தீர்மானிப்பதற்கு சுப்பர் ஓவர் வழங்கப்பட்டது.

இதன்போது பாகிஸ்தான் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, அணித்தலைவர் பாபர் அசாம் 125 ஓட்டங்களையும், வஹாப் ரியாஸ் 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

சிம்பாப்வே அணியின் பந்துவீச்சில், ப்ளெஸிங் முசரபானி 5 விக்கெட்டுகளையும், ன்கார்வா மற்றும் திரிபானோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

சுப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 2 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்த எளிய வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய சிம்பாப்வே அணி, மூன்றாவது பந்திலேயே வெற்றி இலக்கை கடந்து சிறப்பான வெற்றியை பதிவுசெய்தது.

ஏற்கனவே பாகிஸ்தான் அணி இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றிய போதும், இறுதிப்போட்டியின் சிறப்பான வெற்றி சிம்பாப்வே அணிக்கு பெரும் ஆறுதலை அளித்துள்ளது.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக போட்டியில் 5 விக்கெட்டுகளையும், சுப்பர் ஓவரில் 2 விக்கெட்டுகளையும் சாய்த்த ப்ளெஸிங் முசரபானி தெரிவுசெய்யப்பட்டார். தொடரின் நாயகனாக பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அசாம் ​தெரிவானார்.

Thu, 11/05/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை