நாட்டை முடக்கி பொருளாதாரத்தை சீரழிப்பதே எதிரணியின் நோக்கம்

அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ

நாட்டை முடக்கி பொருளாதாரத்தை முடக்குவது தான் எதிர்கட்சியினரின் நோக்கம் என விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று முன்தினம்(09) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

தென்பகுதியில் இருந்து வட பகுதிக்கு வருகின்ற அமைச்சர்கள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுகிற அதே வேளை நாட்டின் பொருளாதாரத்தையும் மேம்படுத்த வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை நாங்கள் செய்ய வேண்டும்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் காலத்திலும் கொவிட்-19 இருந்தது. அவர்கள் எங்களை விட மிக மோசமாக பாதிக்கப்பட்டனர். ஆனாலும் இப்போது அவர்கள் வாழ்க்கை முன்னேறிக்கொண்டு தான் செல்கிறது. நாங்களும் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும்.

பொதுமக்களோ, சுகாதார தரப்பினரோ பொருளாதாரம் முடங்குவதை விரும்பவில்லை. நாட்டை முடக்கும் தீர்மானம் அரசாங்கத்தால் எடுக்க முடியாது. அதனை சுகாராத அமைச்சு தான் தீர்மானிக்க வேண்டும். அவர்கள் வழங்கும் விடயங்களை வைத்துக்கொண்டு தான் அரசாங்கம் முடிவெடுக்கும்.

ஆனால் எதிர்க்கட்சியினர் விரும்புகிறார்கள். பொருளாதாரத்தை முடக்குவது தான் அவர்கள் நோக்கமாக இருக்கிறது. நாடு முடக்கப்பட்டாலும் அவர்கள் வெளியில் நடமாடுவார்கள்.

அவர்கள் கருமங்களை அவர்கள் செய்வார்கள். இதைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள். நாங்கள் அதை விரும்பவில்லை. பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லவே நாங்கள் விரும்புகிறோம் எனத் தெரிவித்தார்.

Wed, 11/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை