நெடுந்தீவு மக்களின் எதிர்பார்ப்புகள் விரைவில் நிறைவேற்றப்படும்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி

நெடுந்தீவு பிரதேசத்திற்கான போக்குவரத்து மற்றும் குடிநீர் பிரச்சினைகளை தீர்த்து வைப்பது தொடர்பாக ஏற்கனவே அமைச்சரவையில் கலந்துரையாடி, அடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இன்னும் சில வருடங்களில் நெடுந்தீவு மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக் குழுவின் கலந்துரையாடல் குறித்த குழுவின் தலைவரும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான ஜோன்ஸ்ரன் பெர்னாண்டோ தலைமையில் நேற்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான தேசிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒரு குழுவான கிராமப்புற உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு குழுவின் இன்றைய கூட்டத்தில், நெடுந்தீவு பிரதேச சபை தலைவரினால் தமது பிரதேசத்திற்கான போக்குவரத்தில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பாக எடுத்துக் கூறப்பட்ட நிலையிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்குறித்த விடயத்தினை தெரிவித்தார். மேலும் கடந்த ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட வீடமைப்புத் திட்டங்களுக்கு பூரணமாக நிதி வழங்கப்படாமையினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் நலன் கருதி, குறித்த வீடுகளுக்கான மீதித் தொகையை வழங்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் அறிவுறுத்தியுள்ளதாக வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுரத்த தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த வீடமைப்பு திடடங்கள் சட்டரீதியாக அனுமதிக்கப்பட்ட காணிகளில் அமைக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் எஞ்சிய தொகை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இவ் விடயம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவையில் பிரஸ்தாபித்திருந்த நிலையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் குறித்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் அனைத்து வீடுகளுக்கும் மின்சார இணைப்பு வழங்கும் வேலைத் திட்டத்தினை விரைவில் நிறைவுக்கு கொண்டு வரவேண்டும் என்று கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக் குழுவின் தலைவர் அமைச்சர் ஜோன்ஸ்ரன் பெர்னாண்டோ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் 3,000 வீடுகளும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 4,000 வீடுகளும் மின்சார இணைப்பு இன்றி காணப்படுகின்றது.

 

Sat, 11/07/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை