கடந்த 2019ஆம் ஆண்டு, மன்னார் மாவட்டத்தில் 40 குளங்கள் புனரமைப்பு திட்டத்தில் நிதி பற்றாக்குறை காரணமாக 36 குளங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதில் 30 குளங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளது. மிகுதி 6 குளங்களின் பணிகள் நிறைவு பெறாமல் உள்ளது என, மன்னார் நீர்ப்பாசன பணிப்பாளர் நடராசா யோகராசா தெரிவித்தார்.
குளங்களின் புனரமைப்பு தொடர்பாக அவரிடம் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்தில் 40 குளங்கள் புனரமைப்பு திட்டத்தில் சுமார் 300 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதில், வரிகள் போக 233 மில்லியன் ரூபா நிதி அனுமதிக்கப்பட்டது. இறுதியில் 80 மில்லியன் ரூபா நிதியே எமக்கு கிடைத்தது.
அதில் விவசாயிகளின் வேலை இடைநிறுத்தப்படக்கூடாது என்பதற்காக 130 மில்லியன் ரூபாவுக்கான வேலை செய்து முடிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒப்பந்தக்காரர்களுக்கு 50 மில்லியன் ரூபா கடனாக கொடுக்க வேண்டியுள்ளது.
இவர்களுக்கான கொடுப்பனவுகள் கொடுத்து முடிக்கப்பட்டதும் விடுபட்டிருந்த 6 குளங்களுடன் புதிதாக 7 குளங்களும் உள்வாங்கப்பட உள்ளது.
மொத்தம் 13 குளங்கள் மன்னார் மாவட்டத்தில் புனரமைப்பு செய்யப்பட உள்ளது. இவை அடுத்த வருடம் ஜனவரியின் பின்னரே ஆரம்பிக்கப்படும், என மன்னார் நீர்ப்பாசன பணிப்பாளர் நடராசா யோகராசா மேலும் தெரிவித்தார்.
(மன்னார் குறூப் நிருபர் - எஸ். றொசேரியன் லெம்பேட்)
from tkn