2021 வரவு செலவுத் திட்டத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்லல்

ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்‌ஷ நடவடிக்கை

இம்முறை வரவு செலவுத் திட்டத்தை செயற்படுத்தும் போது கிராமிய குழுக்களினால் முன்வைக்கப்படும் அபிவிருத்தி முன்மொழிவுகளுக்கு முன்னுரிமை வழங்கி மாகாண மற்றும் மாவட்ட மட்டத்தில் செயற்படுத்தும் நடவடிக்கை, மாகாண ஆளுநர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்படும் என பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ச குறிப்பிட்டார்.

மாகாண ஆளுநர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், மேலதிக மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட திட்ட பணிப்பாளர்களுடன் கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நிபுணர் குழுக்கள், அமைச்சுக்களிடமிருந்து பெற்றுக் கொண்ட கருத்துக்கள் மற்றும் கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின் ஊடாக பொதுமக்களிடமிருந்து பெற்ற கருத்துக்கள் ஆகியவற்றை கருத்திற்கொண்டு, கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்வைக்கப்பட்ட சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தின் இலக்குகளை அடையும் நோக்குடன் முன்வைக்கப்பட்ட 2021 வரவு செலவுத் திட்டத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதனை நடைமுறைப்படுத்துவது இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது. அபிவிருத்தி முன்னுரிமைகள் ஆறு பிரிவுகளின் ஊடாக அந்த திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கும் பணி மாகாண மற்றும் மாவட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும்.

2021 வரவு செலவுத் திட்டத்தில் அந்தந்த அமைச்சுக்கள் மற்றும் அமைச்சர்களின் விடய பொறுப்பிற்கமைய முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளை முறையாக கிராம மட்டத்தில் செயற்படுத்தும் பணியை ஒருங்கிணைப்பதற்கு பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி முக்கியத்துவமளித்து செயற்படும்.

பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளை கிராமிய மட்டத்தில் எவ்வாறு செயற்படுத்துவது என்பது தொடர்பில் 14 ஆயிரம் கிராம மக்களின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை பெற்றுக் கொள்வதற்கு ‘கிராமத்துடன் கலந்துரையாடல்’ வேலைத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி, அதில் பிரதிநிதித்துவப்படுத்தப்படாதவர்கள் மற்றும் அரச அதிகாரிகளின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதற்கு ‘வேலைத்திட்டத்துடன் மீண்டும் கிராமத்திற்கு’ செயல்திட்டத்தை மாகாண மட்டத்தில் ஆரம்பிப்பதற்கு டிசம்பர் 14ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை செயற்படுத்துவதாக பசில் ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த பசில் ராஜபக்ஷ,

இம்முறை மக்கள் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள், கிராமத்திலுள்ள சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பிற அமைப்புகளின் பங்களிப்புடன் இந்த கிராமிய குழுக்களுக்கு முன்வைக்கப்படும் கிராம மக்களின் முன்மொழிவுகளை மேலும் முறையாக ஆய்வு செய்து அதனை முன்னுரிமை அளிப்பதனையே நாம் எதிர்பார்க்கிறோம்.

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் கிராமிய உற்பத்தி துறையின் வளர்ச்சிக்கு மேலும் ரூபாய் 2 ஆயிரம் மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மகளிர் தொழில்முனைவோரை உருவாக்கி அவர்களது உற்பத்திகளை விநியோகிப்பதற்கு கிராமிய மட்டத்தில் விற்பனை நிலையங்கள் ஆரம்பிக்கப்படும். அனைத்து கிராமங்களுக்கும் சென்று கிராம மக்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து அவர்களின் பங்கேற்புடன் ‘வேலைத்திட்டத்துடன் மீண்டும் கிராமத்திற்கு’ செயல்திட்டத்தை செயற்படுத்துவது அரசாங்கத்தின் நோக்கமாகும். இந்த வரவு செலவுத் திட்டம் உண்மையான இலங்கையின் அடையாளம், கலாசாரம் மற்றும் உள்ளூர் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட வரவு செலவுத் திட்டம் என்றும், அதற்கு மாகாண மற்றும் மாவட்ட மட்டத்தில் தலையிடுமாறு அரச அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்கிறேன்.

ஒவ்வொரு அமைச்சுக்களுக்கிடையேயும் முறைகள் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். அதேபோன்று கிராம மட்டத்திலும் பல்வேறு கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகள் ஏற்படக்கூடும். அதனால் கிராமத்தின் பிரதான குழுக்கள் ஊடாக முன்னுரிமையளித்து பிரதேச அபிவிருத்தி குழுக்களில் அங்கீகரித்து வரவு செலவுத் திட்டத்தை செயற்படுத்த வேண்டும். இதன் மூலம் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளை இன்னும் திறம்பட மேற்கொள்ள முடியும்.

கடந்த அரசாங்க காலத்தில் கூட்டுறவு நுகர்வோர் துறை வீழ்ச்சியடைந்தது. அந்தத் துறையை நாம் புதுப்பிக்க வேண்டும். தானிய உற்பத்தியைப் பாதுகாக்க கிராம மட்டத்தில் களஞ்சிய வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்போம். நாங்கள் முன்னுரிமை கொடுக்கும் பல பிரிவுகள் உள்ளன. அதற்கமைய இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நாம் கல்வி சுகாதாரம் மற்றும் சமூக நலன்புரி துறைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கிராம தகவல்தொடர்புகளின் கீழ் கிராமத்திற்கு அதிவேக இணைய வசதியை வழங்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

கிராமப்புற பாடசாலைகளில் தொலைதூரக் கல்வியின் வளர்ச்சிக்கு மேலும் ரூபாய் 3 ஆயிரம் மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. எமது இந்த வேலைத்திட்டம் தொடர்பில் மக்களை விழிப்பூட்டி அவர்களின் ஒத்துழைப்பின் ஊடாக பயனுள்ள வளர்ச்சி இலக்குகளை அடைவதே எமது குறிக்கோள்.

குறித்த சந்தர்ப்பத்தில் மாகாண ஆளுநர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், மேலதிக மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட திட்ட பணிப்பாளர்கள் உள்ளிட் அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Mon, 11/30/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை