- 11 பஸ்களில் 254 பேர் அழைத்து வரப்பட்டபோது சம்பவம்
ஓமான் நாட்டிலிருந்து நாடு திரும்பிய 25 பயணிகளை ஏற்றிவந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியுள்ளது.
யாழ். விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு சென்ற பஸ்ஸே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.
கிளிநொச்சி, பளை, ஆனைவிழுந்தான் பகுதியில் இன்று காலை 9.45 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றிருக்கின்றது.
சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கத்தினால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் நம்புகின்றனர்.
குறித்த பஸ் வீதியை விட்டு விலகி நீர் விநியோக குழாய் மீது மோதி இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் 17 பேர் காயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்த 3 பேர் உடனடியாக அம்புலன்ஸ் வண்டி மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர். ஏனையோர் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஓமான் நாட்டிலிருந்து நாடு திரும்பிய 254 பேர் தனிமைப்படுத்தலுக்காக 11 பேருந்துகளில் விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்ட நிலையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவ இடத்தில் சுகாதார பிரிவினர், இராணுவத்தினர், பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.
(கிளிநொச்சி குறூப் நிருபர் - எம். தமிழ்செல்வன்)
from tkn