இலங்கை கிரிக்கெட்டின் புதிய தலைக்கவச பங்காளராக மெசூரி

இலங்கை கிரிக்கெட்டின் உத்தியோகபூர்வ தலைக்கவச பங்காளர்களாக ஐக்கிய இராச்சியத்தின் மெசூரி (Masuri) நிறுவனம் இணைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

மெசூரி நிறுவனம் உத்தியோகபூர்வ தலைக்கவச பங்காளர்களாக மாறியிருக்கும் விடயத்தினை, இலங்கை கிரிக்கெட் (19) வெளியிட்ட ஊடக அறிக்கையில் உறுதி செய்திருக்கின்றது.

அதன்படி, சில வருடங்களுக்கு செல்லுபடியாகும் விதத்தில் இலங்கை கிரிக்கெட் சபையுடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கும் மெசூரி நிறுவனம் இலங்கையின் ஆடவர், மகளிர் தேசிய கிரிக்கெட் அணிகளுக்கு தலைக்கவசங்களையும், கழுத்து உள்ளடங்கலாக முள்ளந்தண்டு பகுதியினை பாதுகாக்கின்ற கவச உபகரணத்தினையும் வழங்கவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. அதோடு, இந்த பாதுகாப்பு உபகரணங்கள் இலங்கையின் ஏ கிரிக்கெட் அணி, 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி ஆகியவற்றுக்கும் கொடுக்கப்படவிருக்கின்றன.

இலங்கை கிரிக்கெட்டுடன் மெசூரி நிறுவனம் பங்காளர்களாக இணைந்த விடயம் பற்றி கருத்து தெரிவித்த இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் மோஹான் டி சில்வா, ”இலங்கை கிரிக்கெட்டுடன் மெசூரி நிறுவனம் கைகோர்த்தது அவர்கள் இலங்கை கிரிக்கெட் விளையாட்டு மீது வைத்திருக்கின்ற உறுதியான நம்பிக்கையினை வெளிப்படுத்துவதாக இருக்கின்றது” எனக் கூறியிருந்தார்.

இலங்கை கிரிக்கெட்டுடன் கைகோர்த்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட மெசூரி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சாம் மில்லர், இலங்கை கிரிக்கெட்டுடன் இணைந்தது மகிழ்ச்சி தருகின்றது எனக் குறிப்பிட்டு, பாதுகாப்பு என்று வரும் போது இலங்கை கிரிக்கெட் தமது உற்பத்திகளை பயன்படுத்துவது சிறப்பான விடயம் என்றும் கூறியிருந்தார்.

மெசூரி நிறுவனம் இலங்கை கிரிக்கெட் சபையுடன் பங்காளர்களாக மாறுவதற்கு மேற்கொண்ட ஒப்பந்தம் ஒகஸ்ட் 31, 2020 என்கிற திகதியில் இருந்து செல்லுபடியாக ஆரம்பித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

Fri, 10/23/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை